ஈழப் போரில் நடந்த மனித உரிமை மீறலுக்கு இது ஆதாரம்... இசைப்பிரியா படுகொலைக்கு ப.சிதம்பரம் கண்டனம்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், ஏராளமான விடுதலைப்புலிகளுடன், அப்பாவி பொதுமக்களும் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது நடந்த சண்டையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப்பிரிவில் இடம்பெற்றிருந்த இசைப்பிரியாவை ராணுவம் சுட்டுக்கொன்றதாக இலங்கை அரசு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், இசைப்பிரியா கோடூரமான முறையில் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப் பட்டது தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த சேனல்-4 என்ற தொலைக்காட்சி சில தினங்களுக்கு முன்னர் புதிய காட்சிகள் சிலவற்றை வெளியிட்டது.
அதில், இசைப்பிரியா கைகள் பின்னால் கட்டப் பட்டு இலங்கை ராணுவத்தினால் அழைத்துச் செல்லப் படும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டை சீர்குலைப்பதற்கான முயற்சி என்றும், இசைப்பிரியா காட்சிகள் போலியானவை என்றும் இலங்கை மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மரியாதை நிமித்தமாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அதன்பின் நிருபர்களிடம் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது, ‘இசைப் பிரியா இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இலங்கை போரின் போது மனித உரிமை மீறியதற்காக ஆதாரம் உள்ளது. அதற்காக விசாரணையை இலங்கை எதிர்கொள்ள வேண்டும்.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. பிரதமர் கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் உயர்நிலைக்குழு முடிவு எடுத்தது எனக்கூறுவது தவறு' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications