இன்னொரு இழுபறி.. ஜெ. மீதான வருமான வரி வழக்கு விசாரணை அக். 16க்கு ஒத்திவைப்பு
சென்னை: ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கின் விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜாரகாத வரை அதை விசாரிப்பது சரியாக இருக்காது என்று கூறி சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான நீண்ட கால இழுபறி வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

இவர்கள் இருவரும், 1992-93 மற்றும் 1993-94 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அவர்கள் மீது வருமான வரித்துறை உதவி ஆணையாளர், சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தட்சணாமூர்த்தி, ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராகும்படி கடந்த மாதம் 18-ந் தேதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவும், சசிகலாவும் தனித் தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
அதை விசாரித்த நீதிபதி கே.பி.கே.வாசுகி, ஜெயலலிதாவும், சசிகலாவும் 6 வாரங்களுக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் அபராதத்துடன் அனைத்து கட்டணமும் செலுத்த தயாராக உள்ளதாக வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரலிடம் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி சமரச மனுக்களை கொடுத்துள்ளனர். அந்த மனுக்களை 6 வாரங்களுக்குள் வருமான வரித்துறை பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தரப்பு வக்கீல்கள், வழக்கு விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ராமசாமி, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, தள்ளிவைக்காமல், விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கை பிற்பகலுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு அளித்துள்ளது. அவர்கள் நேரில் ஆஜரானால்தான் வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியும். அவர்கள் இல்லாமல், இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று கூறி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications