நாராயணசாமிக்காக ராஜினாமா செய்த மாஜி எம்.எல்.ஏ. ஜான்குமார் வீட்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் பறிமுதல்
புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ ஜான்குமார் வீட்டில் ரூ. 1 கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித் துரையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது.
புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி 17 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அதைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியை முதலமைச்சராக அறிவித்தது கட்சி மேலிடம்.
தேர்தலில் போட்டியிடாதவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் எதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டுமென்பது விதி. அதன்படி நாராயணசாமி போட்டியிடுவதற்கு வசதியாக தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் ஜான்குமார்.
அப்போது, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்காக ஜான்குமார் பணம் பெற்றதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இன்று மதில் 2.30 மணியளவில், நெல்லித்தோப்பு சவரிபடையாட்சி வீதியில் உள்ள அவரது வீட்டோடு சேர்ந்த அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.