வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை? கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
அந்தமான் அருகே வரும் 25ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அந்தமான் அருகே வரும் 25ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் அதிரடி காட்டிய வடகிழக்குப் பருவமழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கியது.
இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது. ஆனால் அதற்கு பிறகு தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மழை பெய்யவில்லை.

பனிமூட்டம் - கடும் குளிர்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பனிமூட்டத்துடன் கடும் குளிரும் நிலவி வருகிறது.

வங்கக்கடலில் காற்றழுத்தம்
இந்நிலையில் அந்தமான் அருகே வரும் 25ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக மேற்கு அந்தமான்-நிகோபார் தீவுகளின் கடற்கரை பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு 2.5மீ முதல் 3.2 மீ உயரத்துக்கு அலை எழுகிறது.

மேகமூட்டம் - சிறுதூறல்
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது சிறுதூறலும் இருந்து வருகிறது.

மழை - கடல் சீற்றம்
குமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் தென் கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்துவருகிறது. நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

வாய்ப்பு இல்லை
ஆனால் வங்கக்கடலில் இனியொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பில்லை என தனியார் வானிலை அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications