போயஸ் கார்டனில் 2 அறைகளுக்கு சீல் வைத்த ஐடி அதிகாரிகள்? ரெய்டுக்கு முன்னோட்டம்?
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவில் 2 அறைகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததாக கூறப்படுகிறது. அதிரடி ரெய்டுக்கு முன்னோட்டமாகவே இந்த அறைகள் சீல் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: போயஸ் கார்டன் பங்களாவில் 2 அறைகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்திருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போயஸ் கார்டனில் சோதனை நடத்துவதற்கு முன்னோட்டமாகவே இந்த அறைகள் சீல் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்த 90 பேரை வருமான வரித்துறை களத்தில் இறக்கியுள்ளது. இந்த அதிரடி சோதனைக்கு பாதுகாப்பாக துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.
ராமமோகன் ராவ்
தலைமைச் செயலராக இருந்த ராமமோகன் ராவ் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்திய தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமமோகன் ராவ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.
போயஸ் கார்டன் பங்களாவில்...
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நெஞ்சுவலி என கூறி மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார் ராமமோகன் ராவ். இதனிடையே கடந்த 24-ந் தேதியன்று காலையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தற்போது சசிகலா வசித்து வரும் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் அதிரடியாக ஒரு டீம் நுழைந்ததாக கூறப்படுகிறது.
2 அறைகளுக்கு சீல்
அங்கு குறிப்பிட்ட 2 அறைகளைப் பார்வையிட்ட அந்த டீம் பின்னர் சீல் வைத்துவிட்டு திரும்பியுள்ளதாம். அந்த அறையில் அதிமுக கட்சி தொடர்பான ஆவணங்கள் அல்லது அமைச்சர்கள் தொடர்பான பைல்கள் இருக்கலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரெய்டுக்கு முன்னோட்டம்?
இந்த அறைகள் சீல் வைக்கப்பட்டதே அதிரடி ரெய்டுக்கு முன்னோட்டம் என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள். இதனால் மன்னார்குடி கோஷ்டி கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாம்.