துணை ராணுவம் உதவியுடன் தலைமை செயலகத்தில் ஐடி சோதனை- 40 ஆவணங்கள் பறிமுதல்!
சென்னை: தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவின் வீட்டைத் தொடர்ந்து சென்னை கோட்டையில் தலைமை செயலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள், துணை ராணுவத்தினர் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ராமமோகன் ராவ் அறையில் இருந்து 40க்கும் மேற்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ171 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கம் சிக்கியது. அவரிடம் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்.
44 கிலோ தங்கம்
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. அவரது ஆந்திரா வீடுகளில் இருந்து 44 கிலோ தங்கம் சிக்கியுள்ளது.
தலைமை செயலகத்தில்..
இச்சோதனைக்காக ராமமோகன் ராவ் வீடு, வருமானவரித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே திடீரென சென்னை கோட்டையில் தலைமைச் செயலகத்தில் ராமமோகன் ராவின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
20 அதிகாரிகள்....
துணை ராணுவப் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 20 வருமான வரித்துறை அதிகாரிகள் ராமமோகன் ராவின் அலுவலகத்தை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
40 ஆவணங்கள்
இச்சோதனையின் போது ராமமோகன் ராவின் அறையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் முதல் முறையாக தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.