5வது நாள்.. ஆஃப் ஆகாத ஐடி! கோவை செந்தில் பாலாஜி நண்பர் அலுவலகத்தில் இரவு பகலாக நடக்கும் ரெய்டு
கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் செந்தில் கார்த்திகேயனின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை 5 வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கரூர், சென்னை, கோவை, ஐதராபாத் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்றன.

கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டிற்குள்ளும் ஐடி அதிகாரிகள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். செந்தில் பாலாஜியின் நண்பர்கள், திமுக நிர்வாகிகள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையின் சோதனையிட தொடங்கினர்.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு இருக்கும் மண்மங்கலம் பகுதியிலும் பல இடங்களில் சோதனை நடைபெற்றது.
குறிப்பாக கோவையில் செந்தில் பாலாஜியின் நண்பர் செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொள்ள தொடங்கினர். கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் அமைந்து இருக்கும் செந்தில் கார்த்திகேயன் வீடு, அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட தொடங்கினார்கள்.
வெள்ளிக்கிழமை தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை பல இடங்களில் நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்றும் பல இடங்களில் 5 வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் செந்தில் கார்த்திகேயனின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை இன்னும் நிறைவடையவில்லை. 5 வது நாளாக இன்றும் ஐடி அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

எஸ்பி வேலுமணியின் வலதுகரம் என்று கூறப்பட்ட செந்தில் கார்த்திகேயன், அதிமுகவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இணைந்து செந்தில் பாலாஜியின் நம்பிக்கைக்குரியவராக மாறினார் செந்தில் கார்த்திகேயன். எம்ஜிஆர் இளைஞரணி கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த அவர், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் நம்பிக்கையாக திகழ்ந்தார் என்று கூறப்படுகிறது.
அதிமுக வெற்றிபெற்றால் கோவை மேயராக செந்தில் கார்த்திகேயன் மனைவி கிருபாலினி அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தேர்தலில் அதிக இடங்களை திமுக வென்றது. கிருபாலினியும் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் செந்தில் கார்த்திகேயன் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications