ராம மோகன் ராவ் வீட்டில் ஐடி ரெய்டு- தலைமைச் செயலகம் உள்பட பல இடங்களில் துணை ராணுவப்படை குவிப்பு
வருமான வரித்துறை சோதனை நடைபெறும் தலைமைச் செயலாளர் வீடு துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலகத்திலும் துணை ராணுவம் குவிக்கப்பட்டது
சென்னை : போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் அண்ணா நகரில் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அண்ணா நகர் பகுதியில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருவான்மியூர் ராஜாஜி நகர் அவ்வையார் தெருவில் உள்ள ராம மோகன ராவ் மகன் விவேக் மற்றும் மருமகள் வர்ஷினி ஆகியோரிடம் காலை 5.30 மணியளவில் இருந்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் மொத்தம் 13 இடங்களில் பல மணி நேரமாக சோதனை நடைபெற்று வருகிறது. ராம மோகன ராவ் மகன் வீட்டில் 200 கிலோ அளவுக்கு ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மணல் மூலம் பணம்
தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ். ராம மோகன்ராவ் உருவாக்கி தந்த திட்டம் மூலமே மணல் குவாரிகள் அரசு வசமானது. மணலை வியாபார பொருளாக்கி பல்லாயிரம் கோடி புரள செய்த பெருமை ராம மோகன் ராவுக்கு பெரும் பங்கு உண்டு.

சேகர் ரெட்டி
மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் மொத்தம் 131 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதில், 92 கோடி ரூபாய் புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 171 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின. இதுதவிர, அவரது இல்லத்தில் இருவகையான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

வருமான வரி சோதனை
சேகர் ரெட்டியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது.

துணை ராணுவம் குவிப்பு
காலை 7 மணியில் இருந்து நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரி அலுவலகம், தலைமைச் செயலகத்திலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ராம மோகன் ராவின் வீடு மொத்தமும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.












Click it and Unblock the Notifications