ரூ200 கோடி வரி ஏய்ப்பு: திமுக மாஜி அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் 2-வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு
சென்னை: திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுக எம்.பி.யாக இருந்தவர் ஜெகத்ரட்சகன். பின்னர் அவர் எம்.ஜி.ஆர். கழகம், வீரவன்னியர் பேரவை... அதைத் தொடர்ந்து ஜனநாயக முன்னேற்றக் கழகம் என தனிக்கட்சி தொடங்கினார். 2009-ம் ஆண்டு அந்த கட்சியை திமுகவுடன் இணைத்துவிட்டார் ஜெகத்ரட்சகன்.
இதனைத் தொடர்ந்து அவர் திமுக சார்பில் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் ஆனார். அப்போது அவரது வருமானம் மிக அதிகமாக உயர்ந்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது.

அதேபோல் நிலக்கரி சுரங்க முறைகேடு மற்றும் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு அதிக பணம் பெற்றது என பல சர்ச்சைகளில் சிக்கியவர் ஜெகத்ரட்சகன். இந்த நிலையில் நேற்று காலை முதல் ஜெகத்ரட்சகனின் வீடு, மருத்துவ கல்லூரி மற்றும் மதுபான ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற இந்த சோதனை விடிய விடிய நடைபெற்று வருகிறது. இன்று 2-வது நாளாகவும் இச்சோதனை நீடிக்கிறது. இதில் ஜெகத்ரட்சகன் ரூ200 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ20 கோடிக்கும் அதிகமான ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications