விடிய விடிய தொடரும் சோதனை.. ராம மோகன ராவ் உதவியாளர்களிடம் தீவிர விசாரணை
சென்னை தலைமை செயலகத்தில் ராம மோகன ராவ் அறையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிந்தது.
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் ராம மோகன ராவ் அறையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிந்தது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் இருவரை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்
தலைமை செயலகத்தில் தலைமை செயலர் ராம மோகன ராவின் அறையில் நேற்று மதியம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதியம் 2.20 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 7.30க்கு நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நிறைவு பெற்றது. ராம மோகன ராவின் கணிணியில் இருந்த தகவல்கள் மற்றும் அறையிலிருந்து சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது தனிச்செயலாளர் அறையில் இருந்த கம்ப்யூட்டர் சி.பி.யூ.வை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். ஹார்ட் டிஸ்க்கில் உள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்தனர். சோதனையின் போது கோப்புகள், சி.டி.க்கள், ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், ராம மோகன ராவின் நேர்முக உதவியாளர்கள் சேகர், குமார் ஆகிய இருவரையும் விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே அண்ணாநகரில் உள்ள ராம மோகன ராவ்வின் வீட்டிலும், திருவான்மியூரில் உள்ள அவரது மகன் விவேக் வீட்டிலும் தொடர்ந்து 19 மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் இன்று வெளியாகும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications