இளவரசி மகன் விவேக் வில்லங்கங்களை விலாவாரியாக போட்டு கொடுக்கும் 'மும்மூர்த்திகள்'!
இளவரசி மகன் விவேக்கின் வில்லங்க விவகாரங்களை சென்னையைச் சேர்ந்த மும்மூர்த்திகள்தான் ஒட்டுமொத்தமாக திரட்டி டெல்லிக்கு அனுப்பியுள்ளனராம்.
சென்னை: டிடிவி தினகரனைத் தொடர்ந்து இளவரசி மகன் விவேக்குக்கு டெல்லி குறிவைத்துள்ளது. விவேக்கின் ரகசிய வில்லங்களை விலாவாரியாக வருமான வரித்துறைக்கு போட்டுக் கொடுப்பதே மூவரணிதான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
அதிமுகவின் கோஷ்டிகள் ஒருங்கிணைந்து இரட்டை இலை மீட்கப்படும் நிலை உருவாகி உள்ளது. டெல்லியின் முழு ஒத்துழைப்புடனே இந்த காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
கபடி விளையாடும் விவேக்
அதேநேரத்தில் இந்த இணைப்பு முயற்சியை உடைத்து தவிடு பொடியாக்கலாம் என ஜெயா டிவியும் நமது எம்ஜிஆர் பத்திரிகையும் கபடி விளையாடிப் பார்க்கின்றன. இந்த விளையாட்டை முன்னின்று நடத்துவதே தினகரனின் வலது கரமான விவேக்தான்.
அடங்காத விவேக்
தொடக்கத்தில் விவேக்கை வளைக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சித்தது. ஆனால் விவேக் பிடிகொடுக்கவில்லை. தற்போது குறுக்குசால் ஓட்டாமல் அமைதியாக இருக்கலாமே என எடப்பாடி தரப்பும் அட்வைஸ் செய்து வருகிறது. ஆனால் விவேக் அடங்குவதாக இல்லை.
வலை விரிப்பு
அதிமுகவின் அதிகார மையங்களில் சசிகலா குடும்பத்தின் எச்சமாக இருப்பவர் விவேக். இப்போது அனைவரது பார்வையும் விவேக் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட விவகாரங்களில் விவேக்குக்கு வலை விரித்து வைத்திருக்கிறது டெல்லி.
மும்மூர்த்திகள்
இந்த நிலையில் சென்னையில் 'நட்டநடுசென்டர்' திரையரங்க உரிமையாளர் உள்ளிட்ட மூவரணி விவேக்குக்கு எதிராக கைகோர்த்திருக்கிறது. இவர்கள் அனைவருமே அதிமுக ஆட்சியில் விவேக்கால் நேரடியாக மிரட்டப்பட்டவர்கள்.
விரைவில் ரெய்டு
இந்த மும்மூர்த்திகள்தான் விவேக்கின் வில்லங்க விவகாரங்களை விலாவாரியாக டெல்லிக்கு போட்டுத் தருகிறதாம்... எந்த நிமிடத்திலும் விவேக்குக்கு காப்பு ரெடியாகும் என்பதால் கடந்த சில நாட்களாகவே 'பதுக்கல்' வேலைகளில் தல படுபிஷியாம்.