மக்கள் அதிமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்: மு.க. ஸ்டாலின்
மதுரை: அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் இருக்கும் பி.டி.ஆர். திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
மதுரையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் அதிபர்கள், மருத்துவர்கள் என பலதரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது. அந்த கூட்டத்தில் தான் மக்கள் அதிமுக அரசு மீது எவ்வளவு கோபத்தில் உள்ளனர் என்பது தெரிய வந்தது. திமுக ஆட்சியை 80 சதவீதம் பேர் விரும்புகிறார்கள். அடுத்த ஆண்டு 100 சதவீதம் பேர் திமுக ஆட்சியை விரும்புவார்கள்.
திமுக பல வெற்றி, தோல்விகளை கண்ட கட்சி. தோல்வியை கண்டு திமுகவினர் துவண்டுவிட மாட்டார்கள். திமுக போன்று வெற்றியும், தோல்வியும் அடைந்த கட்சி எதுவும் கிடையாது. திமுகவை யாராலும் அழிக்க முடியாது.
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது திமுக அல்ல தமிழக மக்களே. அவர்கள் தங்களின் தவறை தற்போது தான் உணர்கிறார்கள். ஊமை கணவு கண்டால் வெளியே சொல்ல முடியாது என்பது போன்று மக்கள் தாங்கள் செய்த தவறை வெளியே கூற முடியாமல் உள்ளனர். அவர்கள் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்பார்த்து உள்ளார்கள்.
மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டசபையை கூட்ட வேண்டும் என்று நான் தெரிவித்தேன். அதற்கு சட்டசபையை எப்பொழுது கூட்ட வேண்டும் என எங்களுக்கு தெரியும் என முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அவரால் முதல்வர் பணியை செய்ய முடியவில்லை.
தமிழகத்தில் தொழில் துவங்க வந்த வெளிநாட்டவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். திமுக ஆட்சியில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு 2.5 லட்சம் பேருக்கு வேலை கிடைத்தது. அதிமுக ஆட்சியில் எத்தனை தொழிற்சாலைகைளை துவங்கினார்கள் என பன்னீர்செல்வத்தால் தெரிவிக்க முடியுமா?
அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. திமுக தொண்டர்கள் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications