செய்யது பீடி நிறுவனம் ரூ161 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது: ஐ.டி., தகவல்
சென்னை: செய்யது பீடி நிறுவனம் 161.56 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செய்யது பீடி நிறுவனத்திற்கு மதுரை, சென்னை போன்ற இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. செய்யது பீடி நிறுவனம் முறையாக வரிசெலுத்தவில்லை என்று கூறி கடந்த வாரம் நெல்லை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் 40 இடங்களில் வருமான வரிச் சோதனை நடந்தது.
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 63 இடங்களில் சோதனை நடைபெற்றது. கடந்த ஜூன் 28ம் தேதி நெல்லை, சென்னை பெல்ஸ் சாலையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ5.74 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் துபாயில் முதலீடு செய்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருமான வரிச் சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.