கருணாநிதி முன்னிலையில் தான் வேட்பாளரை அறிவிப்போம்: அடம் பிடிக்கும் கூட்டணி கட்சி
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் வேலூர் தொகுதியின் வேட்பாளரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் இ.அஹமது அறிவிக்க உள்ளார்.
ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணிக்கு ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு தங்களுக்கு வேலூர் வேண்டும் என கேட்டுப் பெற்றது.

இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ.அஹமது, திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்களைச் சந்திக்க விரும்பிய எனக்கு, தங்களது கடுமையான பணிகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி அளவளாவியதற்கு நன்றி தெரிவிப்பதோடு, நீண்ட நெடிய பாரம்பரிய உறவு கொண்ட திமுக கூட்டணியில் வேலூர் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கித் தந்ததற்கு மனமார்ந்த நன்றி என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 11 மணிக்கு சென்னை காயிதே மில்லத் மன்ஸிலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறுகின்றது.
இதனையடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் வேலூர் தொகுதியின் வேட்பாளரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது அறிவிக்க உள்ளார். மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications