இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உருவாக்கும் மனிதாபிமான அணி!
சேலம்: சங்பரிவார், ஜனதா பரிவார் இருப்பதை போல் இன்ஸானியத் பரிவார் என்ற மனிதாபிமான அணியை தேசிய அளவில் உருவாக்க இருப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
அதிமுகவை எதிர்க்கும் வலிமை திமுக தலைமையிலான அணிக்கு மட்டுமே உண்டு என்றும் கூறியுள்ள காதர் மொகிதீன், திமுகவிற்கு எதிராக தனி அணி அமைப்பது அ.தி.மு.க. எதிரான ஓட்டுக்களை சிதறடிக்க மட்டுமே பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சசி பெருமாள் மரணம்
சேலத்தில் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரி வாழ்நாளெல்லாம் போராட்டம் நடத்தி வந்த காந்தியவாதி சசிபெருமாள் அந்த கோரிக்கைக்காகவே உயிர்த்தியாகம் செய்துள்ளார். அவரது மரணம் மிகுந்த வருத்தத்திற்குரியது. அந்த துயரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கிறது.

மதுவிலக்கு போராட்டம்
சசிபெருமாள் குடும்பத்திற்கு சில அரசியல் கட்சிகள் நிதி உதவி அளித்துள்ளன. தமிழக அரசும் உரிய நிதி உதவி வழங்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் பெண்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து மதுவிலக்கை வலியுறுத்தி வருகின்றன. தமிழக மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில் தமிழக முதல்வர் இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

மதுவிலக்கு அறிவிப்பு
தமிழக சட்டசபையில் எத்தனையோ அறிவிப்புகளை வெளியிடுகின்ற முதல்வர் மது விலக்கு தொடர்பான அறி விப்பை வெளியிட வேண் டும். அப்படி அவர் வெளியிட்டால் அதனை வாழ்த்தி வரவேற்கும் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கும்.

தினசரி வெளிநடப்பு
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் வெளி நடப்பு என்பது அன்றாட நடவடிக்கைகளாகி விட்டன. தினமும் வெளிநடப்பு என்பது நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு ஏற்புடையது அல்ல என்பதை அனைத்து கட்சிகளும் உணர வேண்டும்.

ஜனநாயகக்கடமை
சட்டசபைக்குள் பேச வேண்டிய விஷயங்களை வெளிநடப்பிற்கு பின் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் சொல்ல வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து கொண்டிருந்தால் மக்களுக்கான ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.

ஆளும்கட்சி
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பிற்கு பின் செய்தியாளர்கள் கூறும் விஷயங்களை சட்டசபைக்கு சொல்லும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதேசமயம் எதிர்க்கட்சிகள் தங்களுடைய ஜன நாயக கடமையை நிறை வேற்றுவதற்குண்டான சூழ் நிலையை ஆளும் கட்சியினர் ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்குண்டான நிலையை தமிழக முதல்வரும், சபாநாயகரும் உருவாக்க வேண்டும்.

சட்டசபை தேர்தல்
2016 சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத நிலைமைகள் உருவாகி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க., அ.திமு.க. என்ற இரண்டே அணிகள்தான். இந்த இரண்டு கட்சிகளுக்கு மட்டும்தான் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வாக்கு எண்ணிக்கை உள்ளது.

அதிமுக - திமுக
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகவர்களை நியமிக்கும் வல்லமையும் இந்த இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே உண்டு. ஆனால், இப்போது பா.ஜ.க. தனி அணியாக தேர்தலை சந்திக்கும் என சொல்லுகிறது. தே.மு.தி.க.வும், பா.ம.க. வும் பாஜ.க. அணியிலேயே தொடர்வதாக அதன் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்கிறார். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

ஊழலற்ற ஆட்சி
தே.மு.தி.க.வும் விஜயகாந்த் தான் வருங்கால முதல்வர் என சொல்லுகிறது. எனவே, இந்த மூன்று கட்சிகளும் அடுத்த தேர்தலை பொறுத்தவரை ஒரு தெளிவில்லாத குழப்பமான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன. ம.தி.மு.க., இ. கம்யூனிஸ்ட், வ. கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து மக்கள் நல முன்னணி கண்டன. இது அரசியல் அணி அல்ல, தமிழ்நாட்டு நலனுக்காக போராடுகின்ற இயக்கம் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது இந்த அணி தனி அணி என்றும், தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத ஊழலற்ற ஆட்சியை கொண்டு வருவோம் என சொல்கிறார்கள்.

திமுகவிற்கு எதிரான அணி
இந்த அணிக்கு எங்களிடம் ஆதரவு கேட்டு வந்த போதே நாங்கள் ஒன்றை தெளிவாக குறிப்பிட்டோம். இப்படி அணி அமைப்பதன் மூலம் தி.மு.க. அணியை இது பலவீனப்படுத்தி விடும். தி.மு.க. தலைமையிலான அணியின் மூலமாகவே தேர்தலை சந்திப்போம் என கூறினோம். இது தேர்தலுக்கான அணி அல்ல; மக்கள் பிரச்சனைக்காகவே இணைகிறோம் என்று அவர்கள் எங்களிடத்தில் கூறினார்கள். ஆனால், இப்போது தனியாக தேர்தலை சந்திக்க போவதாக அவர்கள் அறிவித்திருப்பது ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்கும் சூழ்நிலையையே இது உரு வாக்கும்.

அதிமுக மறைமுக உதவி
இன்னமும் சொல்லப் போனால் இந்த 5 கட்சிகளின் இந்த முடிவு அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற மறைமுகமான உதவியாகவே இருக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அ.இ.அ.தி.மு.க.வை எதிர்க்கும் வல்லமை தி.மு.க தலைமையிலான அணிக்கு மட்டுமே உண்டு. எனவே, அ.தி.மு.க. ஆட்சியை எதிர்க்கக் கூடிய அனைத்துக் கட்சிகளும் தி.மு.க. தலைமையிலான அணியிலேயே தங்களை இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துகிறது. அந்த கட்சிகளின் தலைவர்களை யெல்லாம் நான் சந்தித்து இந்த கருத்தை வலியுறுத்துவேன்.

குஜராத் போராட்டம்
குஜராத்தில் பட்டேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மிகப் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். இதில் வன்முறை வெடித்துள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர். பட்டேல் சமூகத்தினர் பொருளாதாரத்திலும், அரசியலிலும் மிகவும் வலிமைமிக்க முற்பட்ட சமூகமாகும். அவர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடுவது என்பது இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்காகவே. இந்த கருத்து உண்மை என நிரூபிக்கும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இடஒதுக்கீடு தேவையா? என சிந்திக்கக் கூடிய நேரம் வந்து விட்டது என கூறுகின்றனர்.

பொருளாதாரம் சீர்குலையும்
இடஒதுக்கீடு தேவையில்லை என கூறுகின்றவர்கள் இந்திய அரசியலில் இல்லாமல் ஆக்கப்பட்டு விடுவார்கள். இடஒதுக்கீடு இல்லையேல் இந்திய பொருளாதாரத் திட்டம் சீர் குலைந்து விடும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எச்சரிக்க விரும்புகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2001ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதவாரியான கணக்கெடுப்பை இப்போது வெளியிட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பின் படி இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், முஸ்லிம்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஊடகங்களின் வாயிலாக தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

முஸ்லீம்களுக்கு எதிராக பிரச்சாரம்
பீகார் தேர்தலை மையமாக வைத்தே இந்துக்களை ஓரணியில் திரட்ட திட்டமிட்ட சதி நடைபெறுகிறது. முஸ்லிம்கள் குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்வது போலவும், குடும்பக்கட்டுப்பாட்டை எதிர்ப்பது போலவும் பிரச்சாரம் நடைபெறுகிறது. உண்மையில், முஸ்லிம்கள் தாங்களாகவே சுயகட்டுப் பாட்டை கடைபிடிக்கின்றனர். அவர்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்பதை 2001 முதல் புள்ளி விவரங்கள் தெளிவாக காட்டுகின்றன.

மனித உரிமை மீறல்
இலங்கை போரின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டி ருந்த அமெரிக்கா தற்போது இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருப்பது வன்மையாக கண்டனத்திற்குரியது. அப்பட்டமான மனித உரிமை மீறலில் தமிழர் களுக்கு நீதியும், நியாயமும் கிடைக்க வேண்டும்.

செயற்குழு கூட்டம்
எதிர்வரும் செப்டம்பர் 6, 7 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு சென்னையில் நடைபெறுகிறது. மூன்று முக்கிய விஷயங்களை முன்வைத்து நாங்கள் முடிவெடுக்க உள்ளோம். தேசிய அளவில் அடிப்படையிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கை பலப்படுத்தும் வகையில் நாங்கள் பணிகளை முடுக்கி விட இருக்கிறோம்.

விழிப்புணர்வு பிரச்சாரம்
இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக திட்ட மிட்டு செயல்படும் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நாங்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் மேற்கொள்ள உள்ளோம். இது தொடர்பான முடிவுகள் தேசிய செயற் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

மனிதாபிமான அணி
மத்தியை ஆளும் பா.ஜ.க. அரசை வழிநடத்தும் இந்துத்துவ சக்திகள் சமய சார்பற்ற ஜனநாயக கொள்கைகளை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனை முறியடிக்கும் வகையில் சங்பரிவார், ஜனதா பரிவார் இருப்பதை போல் இன்ஸானியத் பரிவார் என்ற மனிதாபிமான அணியை தேசிய அளவில் நாங்கள் உருவாக்க உள்ளோம் என்றும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications