ஆர்.கே.நகரில் திமுகவின் மருது கணேஷை பொது வேட்பாளராக கட்சிகள் ஆதரிக்க காதர் மொகிதீன் வேண்டுகோள்
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவின் மருது கணேஷை இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பொது வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.கவின் மருது கணேஷை இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பொதுவேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று அவரது இல்லத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் சந்தித்து ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தும், வெற்றிபெறவும் வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், சட்டசபை கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, மாநில ஊடகப்பிரிவு மின்னணு துணை ஒருங்கிணைப்பாளர் மேலப்பாளையம் அப்துல் ஜப்பார், வடசென்னை மாவட்ட துணைச்செயலாளர் எ.கே. முஹம்மது ரபி ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பிக்கு பின்பு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு திமுக சார்பில் வேட்பாளரும் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தும், வெற்றிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எப்போதும் திமுகவுடன் இயற்கையான தோழமை கொண்ட கட்சி. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருதுகணேஷ் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. விருது பெறும் கணேசாக மாறுவார்.
ஜனநாயக முறை தேர்தல்
திமுக நீதிமன்றத்திற்கு சென்றதால்தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து அறிவித்தது அல்ல. ஜனநாயக பாதையில் செல்லக்கூடிய கட்சி திமுக. எனவே ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
திமுகவுக்கு 2-வது வெற்றி
ஆர்.கே. நகர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன்பேரில் 44 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது இரண்டாவது வெற்றியாகும்.
எதிர்க்கட்சி வேட்பாளர் வெல்வார்
2001 முதல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டபை இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்று வந்தது. இப்போது இந்த நிலை மாறி எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார் என்ற வரலாறு மாறும். இதை அனைவரும் பார்க்க போகிறோம்.
பொதுவேட்பாளர் கோரிக்கை
பா.ஜ.க.வின். கொள்கைகள், ஆட்சிமுறைகள் மக்களால் வெறுப்பு கொண்டுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த தலைவர்களே இதை வெளிப்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்சோரி 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த பொது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
இடதுசாரிகளுக்கு வேண்டுகோள்
அதிமுகவை பா.ஜ.க. மறைவாக இயக்கி கைப்பாவையாக வைத்துள்ளதை நாட்டு மக்களுக்கு தெரியும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் இதை நன்று அறிந்துகொண்டிருக்கிறார்கள். வேட்பாளர் மருது கணேசை பொது வேட்பாளராக நினைத்து அனைத்து கட்சியும் ஆதரிக்க வேண்டும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியை பாதுகாக்கக்கூடியவர்கள் திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். நண்பர் தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவை கொடுக்கும் என்று அறிவித்திருக்கிறார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இடதுசாரி தோழர்களும் மற்றும் பிற கட்சியினரும் ஆதரித்து திமுக வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும். தமிழகத்தில் இதுவரை இல்லாத மாற்றம் இந்த தேர்தல் மூலம் வரும். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைய சத்தியம் கூறும் வகையில் இந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அமையும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.