உருவங்கள் இரண்டு... உயிர் ஒன்றே... ஓபிஎஸ் வீட்டின் முன்பு தீபா ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்!
முதல்வர் ஓபிஎஸை ஆதரித்து தீபா ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். ஓபிஎஸ் வீட்டின் முன்பு உட்பட சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
சென்னை: ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது வீடு முன்பும் சென்னையின் பல்வேறு இடங்களிலும் தீபா ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதில் ஓபிஎஸ், தீபா படங்கள் மற்றும் உருவங்கள் இரண்டு.. உயிர் ஒன்றே என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
முதல்வர் ஓபிஎஸ் கடந்த செவ்வாய்க்கிழமை சசிகலா எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளராக மதுசூதனனை நியமிக்க வேண்டும் என்றும் முதல்வராக தன்னை பதவியேற்கும்படியும் ஜெயலலிதா கூறியதாக தெரிவித்தார்.
மேலும் தன்னை கட்டாயப்படுத்தி சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ராஜினாமா கடிதத்தை பெற்றதாகவும் அவர் கூறினார். முதல்வர் ஓபிஎஸின் இந்த பேட்டி தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பெரிய அதிர்வலைளை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவுக்கு அழைப்பு விடுப்பேன்
கடந்த புதன்கிழமை பேட்டியளித்த முதல்வர் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகள் மரியாதைக்குரியவர்கள். அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு என்று கூறினார். இதைத்தொடர்ந்து இணைந்து செயல்பட ஜெ.தீபாவுக்கு நிச்சயம் அழைப்பு விடுப்பேன் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
பின்னர் அறிவிப்பேன்
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா முதல்வர் ஓபிஎஸ் எனக்கு அழைப்பு விடுத்ததை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். ஆனால் இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றார். அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன் என்றும் தீபா கூறினார்.
தீபா ஆதரவாளர்கள் போஸ்டர்
இந்நிலையில் ஜெ.தீபாவின் ஆதரவாளர்கள் ஓபிஎஸை ஆதரித்து அவரது வீட்டின் முன்பு உட்பட சென்னையின் பல்வேறு இடங்களிலும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் முன்பு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ஜெயலலிதாவுக்கு இருபுறமும் ஓபிஎஸின் படமும் தீபாவின் படமும் இடம்பெற்றுள்ளன.
உருவங்கள் இரண்டு உயிர் ஒன்றே
அதில் உருவங்கள் இரண்டு உயிர் ஒன்றே என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் தீபா ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்திருப்பது உறுதியாகியுள்ளது.