சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து செப்டம்பர் 4ல் ஜெ., கொடநாடு பயணம்
சென்னை: சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த உடன் செப்டம்பர் 4ம் தேதி முதல்வர் ஜெயலலிதா கொடநாடு செல்லத் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல்வரின் துறையான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மீதான மானியக் கோரிக்கையின் விவாதமும், பதில் உரையும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி நடத்தப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அது இன்றைக்கு மாற்றப்பட்டது.

சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. திமுக எம்.எல்.ஏக்கள் 79 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபையில் இந்த பிரச்சினையும் அனலை கிளப்பி வருகிறது.
கட்சியிலும் சில அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் ஜெயலலிதா. தமிழக சட்டசபையில் ஆளும் கட்சி எதிர்க் கட்சி உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடந்துகொண்டிருக்கிற வேளையில் ஒழுங்கு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் ஜெயலலிதா.
தூத்துக்குடி மாவட்டச் செயலாளரும் பால்வளத் துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு முன்னாள் அமைச்சரும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான சி.த.செல்லப் பாண்டியன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது
சசிகலா புஷ்பா மற்றும் வைகுண்டராஜனோடு தொடர்பில் இருந்தவர்கள் இப்போது கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அதில், குமரி மாவட்டச் செயலாளரும் ராஜ்ய சபா எம்.பியுமான விஜயகுமார், தீவிரமாகக் கண்காணிப்பட்டு அ.தி.மு.க தலைமையால் எச்சரிக்கப்பட்டாராம். மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விரைவில் விஜயகுமார் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யவும், ஓய்வு எடுக்கவும் சில வாரங்கள் ஜெயலலிதா கொடநாடு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications