அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்- போர்க்களமானது சென்னை!
Recommended Video
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் சென்னை மாநகர் போர்க்களமாக காட்சியளிக்கிறது.
ஊதிய உயர்வு , புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
சென்னை சேப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 1,400க்கும் மேற்பட்டோரை கைது செய்யும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனால் வாலாஜா சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் செல்லாமல் பல இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் கலைவாணர் அரங்கம் அருகிலும் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேப்பாக்கத்தில் மறியல் நடத்திய ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். அப்போது பெண் ஊழியர்கள் மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. கைது செய்ய செய்ய ஊழியர்கள் வந்துகொண்டே இருப்பதால் போலீசார் செய்வதறியாது திகைத்துள்ளனர்.