போலீஸ் தடையை மீறி சென்னையில் குவிந்த அரசு ஊழியர்கள்- சேப்பாக்கத்தில் பிரம்மாண்ட ஆர்பாட்டம்
போலீஸ் தடையையும் மீறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சென்னையில் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: காவல்துறையினரின் தடையையும் மீறி சென்னையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பிரம்மாண்ட ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின் பேரணிக்கு தடை விதித்துள்ள போலீசார், 15 நிபந்தனைகளுடன், ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்துள்ளனர். எனினும் போராட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
காவல்துறையினரின் தடையையும் மீறி பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னையில் திரண்டுள்ளனர்.
ஜாக்டோ ஜியோ பேரணி
தமிழகத்தில் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 73 சங்கங்கள் இணைந்த ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
பேரணிக்கு தடை
அரசு ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி செல்ல தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதை அடுத்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த ஜாக்டோ - ஜியோவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
15 நிபந்தனைகள்
அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு இன்றியும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எங்கும் கூடக்கூடாது மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட, 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தகவல் சேகரிப்பு
இதற்கிடையில், போராட்டத்தில் பங்கேற்க செல்வோரின் விபரங்களை, மாவட்டம், வட்டம் வாரியாக, போலீசார் சேகரித்து வருகின்றனர். இதனிடையே தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அமைப்புகள் இணைந்த ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் நேற்று நடைபெற்றது.
நடத்தி வருகிறோம்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று சென்னையில் கோட்டை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டோம். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தடுத்த காவல்துறை
இதனிடையே இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள மாவட்டங்களில் இருந்து பஸ், வேன்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களை போலீசார் மிரட்டி திருப்பி அனுப்புவதாக கூட்டத்தில் பேசிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
காலவரையற்ற வேலை நிறுத்தம்
எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு அழைத்து பேசவேண்டும். பேசவில்லை என்றால் ஏற்கனவே திட்டமிட்டபடி 22ஆம்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும். அதன் பிறகும் கோரிக்கைகள் புறந்தள்ளும் பட்சத்தில் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் மாவட்ட அளவிலானவேலைநிறுத்த மாநாடுகளை நடத்த உள்ளோம். இறுதியாக செப்டம்பர் 7ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்குவது என்று திட்டமிட்டுள்ளோம் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.கணேசன் கூறியுள்ளார்.
தடையை மீறி ஆர்பாட்டம்
இதனிடையே தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்தும் சென்னையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் குவிந்து வருகின்றனர். சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே பிரம்மாண்ட ஆர்பாட்டம் நடந்து வருகிறது. தடையை மீறி பேரணியாக செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.