வயிற்றுக்குள் 2.5 கோடி "போதை".. "அயன்" சாந்தினி அதிரடி கைது!
சென்னை: அயன் படத்தில் பார்த்திருப்போம்.. சிறிய டியூப் மாத்திரைக்குள் போதைப் பொருட்களை நிரப்பி அதை வாயில் போட்டு விழுங்கி விடுவார்கள். பிறகு வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று அங்கு மலமிளக்கி கொடுத்து வெளியில் எடுப்பார்கள். அதே பாணியில் கொழும்பிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண்ணை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கொழும்பு நகரிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மாலை ஆறரை மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம் போல சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான சாந்தினியும் அந்த விமானத்திலிருந்து இறங்கி வந்தார். அவர் குறித்து முன்கூட்டியே சில தகவல்கள் கிடைத்திருந்ததால் சுங்கத்துறையினர் அந்தப் பெண்ணை மட்டும் தனியாகப் பிரித்துப் போய் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை மத்திய வருவாய் புலனாய்வு துறையின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது வயிற்றில் சில பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனது வயிற்றில் டியூப்களில் போதைப் பொருட்கள் இருப்பதாக ஒப்புக் கொண்டார் சாந்தினி.
இதையடுத்து அவருக்கு எனிமா கொடுத்து அனைத்து மாத்திரைகளையும் வெளியில் எடுத்தனர். அவரது வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட டியூப்களில் ரூ. 2.5 கோடி அளவுள்ள போதைப் பொருட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரைக் கைது செய்த அதிகாரிகள் தற்போது இதுதொடர்பாக இயங்கி வரும் நெட்வொர்க் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications