ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத்தப்படும்.. போன வருடம் மாதிரியே பேசும் பொன்.ராதாகிருஷ்ணன்
ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு நடத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வரும் பொங்கல் விழாவின்போது ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
புதிய 500 ரூபாய் நோட்டு கிடைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடியும், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் தெரிவித்துள்ளனர்.
கருப்பு பண ஒழிப்பு குறித்து முன் அறிவிப்பு கொடுத்து விட்டு நடவடிக்கை எடுத்து இருக்கலாம் என காங்கிரஸ், தி.மு.க. கூறுவது ஏற்புடையது அல்ல. அது கருப்பு பண முதலாளிகள் ஆதாயம் பெற வழி வகுத்து இருக்கும் என்றார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். கடந்த வருடமும் ஜல்லிக்கட்டு நாள் வரை பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறுதான் கூறிவந்தார் என்பதும் ஆனால் அது நடவாமலே போனதும் நினைவில் இருக்கலாம்.