ஜல்லிக்கட்டு புரட்சி...ஒருவாரமாக இரவு பகலாக அணையாமல் எரியும் தீ....
வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் இரவு பகலாக கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது ஜல்லிக்கட்டு புரட்சி தீ.
சென்னை: தமிழர்களின் பாராம்பரியத்தை அழிக்க விடமாட்டோம். ஜல்லிக்கட்டு நடந்தே ஆக வேண்டும் என்பதான் இன்றைக்கு தமிழகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
பொங்கல் திருவிழாவின் போது அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் இரவு பகலாக நடந்து வந்ததையடுத்து, சென்னையிலும் இரவு பகலாக இளைஞர்கள், மாணவ, மாணவிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்தது. 7 நாட்களைக் கடந்தும் அணையாமல் புரட்சி தீ எரிந்து கொண்டுள்ளது. உலகத்தையை தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இந்த புரட்சி போராட்டம் கடந்து வந்த பாதையைக் காணலாம்.

மெரினா பேரணி
ஜனவரி 8ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போதே நடத்த வேண்டும் என்று கோரி இளைஞர்கள் சென்னை மெரினாவில் கூடினர். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக் கோரியும், பீட்டா அமைப்பைத் தடை செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர்.
அவனியாபுரம் தடியடி
பொங்கல் பண்டிகை தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்கள் விரட்டப்பட்டனர். இயக்குநர் கவுதமன் மீது போலீஸ் தடியடி நடத்தப்படவே பரபரப்பு பற்றிக்கொண்டது.
அலங்காநல்லூர் புரட்சி
ஜனவரி 16ஆம் தேதியன்று பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் கூடிய இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி போராட்டத்தினை தொடங்கினர். 21 மணி நேரம் நீடித்த அவர்கள் போராட்டத்தை வலுக்கட்டாயமாகக் கைது செய்து போலீசார் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
ஜல்லிக்கட்டு புரட்சி
ஜனவரி 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாளன்று சென்னை மெரினாவில் புரட்சி தீ பற்றியது. இந்த தீ 100 பேரால் மூட்டப்பட்டது. ஆயிரமாகி பின்பு லட்சமானது. மாணவர்களும், இளைஞர்களும் அலை அலையாக திரண்டு வந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
மோடி - ஓபிஎஸ் சந்திப்பு
மாணவர்களின் போராட்டம் மிக தீவிரமடையவே இரண்டாவது நாளே முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. உடனே பிரதமரை சந்திக்க டெல்லிக்கு கிளம்பினார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆனால் மோடி கைவிரிக்க போராட்டம் தீவிரமானது. இதனையடுத்து டெல்லியிலேயே தங்கி ஆலோசனை நடத்தினார்.
வாடிவாசல் திறக்க வேண்டும்
வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மதுரை தமுக்கம் மைதானம், கோவை, நெல்லை என தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. பெரு நகரங்கள் மட்டுமல்லாது சின்னச் சின்ன கிராமங்களும் போராட்டத்தில் பற்றி எரிந்தன.
அவசர சட்டம்
இரண்டு நாள் ஆலோசனைக்குப் பின்னர் அவசர சட்டம் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளதாக கூறினார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
அவசரச் சட்டத்தை எல்லாம் காட்டி மாணவர்களை ஏமாற்றி விட முடியாது என்று கூறி நிரந்தர சட்டம் வேண்டி போராட்டக்காரர்கள் இடத்தை விட்டு அகலாமல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆளுநர் ஒப்புதல்
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான தடையை நீக்கி தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை நீங்கியது. இதையடுத்து மதுரை அலங்காநல்லூரில் ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் எதிர்ப்பினால் ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டது.
வெறுங்கையுடன் திரும்பிய முதல்வர்
ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைக்க மதுரை வந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போராட்டக்குழுவினரின் எதிர்ப்பையடுத்து வெறுங்கையுடன் திரும்பினார்.
அதே நேரத்தில் புதுக்கோட்டை, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஈரோடு, கோவையில் நடைபெற்ற போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
அணையாமல் எரியும் தீ
ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழகம் முழுவதும் பல மடங்கு வேகத்துடன் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு எந்த இடத்திலும் நடந்து விடக் கூடாது என்பதில் போராட்டக்கார்கள் தடுத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பெண்களின் பங்கு மேலும், மேலும் அதிகரித்து வருகிறது.
ஒத்திவைக்க கோரிக்கை
ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாற்று வெற்றி பெற்றுவிட்டது என்றும், சில மாதங்கள் ஒத்திவைக்கலாம் என்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் நிரந்தர தீர்வு கிடைக்காமல் கலையப் போவதில்லை என்று கூறி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
முடிவு மாணவர்கள் கையில்
இரவு, பகலாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் மாணவிகள், பெண்கள் கலந்து கொண்டு வீட்டிற்கு செல்லாமல் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் இரவெல்லாம் கலந்து கொள்ள முடியாத குடும்பத் தலைவிகள் போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு சமைத்து, போராட்டக்களத்திற்கு கொண்டு போய் கொடுத்து வருகிறார்கள். இந்த போராட்டத்தை எப்போது முடித்துக்கொள்வது என்பது மாணவர்களின் கைகளில்தான் உள்ளது.












Click it and Unblock the Notifications