வம்படி ஜல்லிக்கட்டுக்கு நத்தம் கோவில்பட்டியிலும் எதிர்ப்பு: தமிழக அரசின் முயற்சி முறியடிப்பு
திண்டுக்கல்: தமிழக அரசு நத்தம் கோவில்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த போட்டுள்ள திட்டத்தை அறிந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ஏற்க மக்களும், புரட்சியாளர்களும் தயாராக இல்லை. இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் வலுக்கட்டாயமாக நடத்தப்படவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தால் அறிவித்தபடி அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தில் காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டை முதல்வர் துவங்கி வைப்பார் என்று கூறப்பட்டது.
இது குறித்து அறிந்த கிராம மக்கள் குறிப்பாக இளைஞர்கள் முதல்வரின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கையில் தேசியக் கொடியுடன் வாடிவாசலை மறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கிராம மக்களின் கொந்தளிப்பால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அலங்காநல்லூரை அடுத்து கோவில்பட்டியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இங்கும் தமிழக அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
எங்கள் ஊரில் இன்று ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பே இல்லை என்று கோவில்பட்டி கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications