ஜல்லிக்கட்டு புரட்சி போல உருமாறும் நீட் எதிர்ப்பு போராட்டங்கள்?
நீட் எதிர்ப்பு போராட்டங்கள் ஜல்லிக்கட்டு புரட்சியாக உருமாறிக் கொண்டிருக்கின்றன.
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக தமிழகமே கிளர்ந்து புரட்சியில் ஈடுபட்டதைப் போல நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக அலங்காநல்லூரில் மையம் கொண்ட புரட்சி சென்னை மெரினாவில் வலுகொண்டது. இந்த புரட்சியை உலகமே திரும்பிப் பார்த்தது.
மெரினா புரட்சி
உலகை உலுக்கிய புரட்சிகளின் வரிசையில் ஜல்லிக்கட்டு புரட்சியும் இணைந்தது. இதனால் உஷாராகிக் கொண்ட அரசு மெரினா புரட்சியை வன்முறை கொண்டு ஒடுக்கியது.
அனிதா மரணம்
அதனைத் தொடர்ந்து எந்த ஒரு புரட்சியும் மெரினாவில் மையம் கொண்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. தற்போது அரியலூர் அனிதாவின் மரணம் தமிழகத்தை மீண்டும் கொந்தளிக்க வைத்துள்ளது.
பட்டி தொட்டிகள் போர்க்களம்
கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் போராட்டக் களமாகி இருக்கிறது. திங்கள்கிழமை முதல் மாணவர்கள் இந்த போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
தடுக்கும் அரசுகள்
நீட் தேர்வுக்கு எதிரான இந்த போராட்டம் மெல்ல மெல்ல தற்போது ஜல்லிக்கட்டு புரட்சியாக உருமாறி வருகிறது. ஆனால் அப்படி எதுவும் நடந்து விடாத வகையில் மாநில அரசு தீவிரமாக கண்காணித்து வருவதால் போராட்டங்கள் புரட்சியாக மாற முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன.