ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பாகிஸ்தான் நிதி உதவி செய்ததாம்..தமிழர் உணர்வை கொச்சைப்படுத்தும் சு.சாமி
சென்னையில், நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தேச விரோத சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு நிதி உதவி செய்தது, என்று கூறியுள்ளார் பாஜக எம்.பி சு.சாமி.
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ நிதி உதவி செய்ததாக கூறியுள்ளார் பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி. இதன் மூலம், தமிழர்கள் தங்கள் பாரம்பரியம் காக்க நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தி மொத்த தேசத்தையும், தமிழகத்தை சந்தேக கண்கொண்டு பார்க்க வைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் அவர்.
மீடியா நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சு.சாமி கூறுகையில், ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுத்தது காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு. நான் ஆரம்பம் முதலே ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெற வகை செய்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறேன்.

அதேநேரம் சென்னையில், நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தேச விரோத சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ நிதி உதவி செய்தது. எனவேதான் நேற்று திடீரென சென்னையில் கலவரம் வெடித்தது.
ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே போராடியவர்கள் ஏற்கனவே மெரினாவை விட்டு கிளம்பி சென்றுவிட்டனர். ஆனால் போராட்டத்தை தொடர்ந்தவர்கள் தங்கள் கைகளில் பிரபாகரன் (விடுதலை புலிகள் தலைவர்) மற்றும் ஹபீஸ் சையது (லஷ்கர்-இ-தொய்பா) போட்டோக்களை வைத்திருந்தனர்.
போராட்டம் செய்தவர்களை, தடியடி நடத்தி விரட்டியடித்ததன் மூலம், பன்னீர்செல்வம் அரசு சிறப்பாக பணியாற்றியுள்ளது என்று கூறியுள்ளார் சு.சாமி.
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் வலுப்பெற தொடங்கியதும் கடுமையான கடுப்புக்கு உள்ளானவர்களில் சு.சாமியும் ஒருவர். அவர் தமிழர்களை பொறுக்கிகள், நக்சல்கள், எலிகள், ஜிகாதிகள் என்றெல்லாம் குறிப்பிடும் வகையில் டிவிட்டரில் கருத்து கூறி வந்தார். ஆனால் இதுவரை அவருக்கு எதிராக பாஜக தலைமையோ அல்லது, தமிழக பாஜக தலைவர்களோ எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் சப்பை கட்டு கட்டி வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications