கவனக்குறைவு, அலட்சியம்... அரசு மருத்துவமனைகளில் கேள்விக்குறியாகும் 'ஆரோக்கியம்'!!
சென்னை: உயர்தர கருவிகள், திறமையான டாக்டர்கள், இலவச சிகிச்சை என ஏழை மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருந்தும், சம்பளம் மற்றும் கிம்பளத்திற்காக மட்டுமே வேலை பார்க்கும் சிலரால் அரசு மருத்துவமனை நோயாளிகள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர்.
வாலு போய் கத்தி வந்த கதைதான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற வருபவர்கள் நிலை என முன்பு பரவலான கருத்து மக்களிடையே இருந்தது. ஏனெனில் அந்தளவுக்கு சுகாதாரமின்மையைக் கண்கூடாகப் பார்க்கலாம் அரசு மருத்துவமனைகளில்.
ஆனால், அந்த நிலை தற்போது மாறி தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான சுத்தத்தை அரசு மருத்துவமனைகளிலும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால், ‘ஒய்யாரமா தாழம்பூ... உள்ளே பார்த்தா...' என்ற கதையாக சமீபகாலமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

அறுந்து விழுந்த ஃபேன்....
சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் குடல் இறக்கத்திற்கு சிகிச்சைப் பெற வந்திருந்த நோயாளியின் வயிற்றில் சுற்றிக் கொண்டிருந்த ஃபேன் கழன்று விழுந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நோயாளி காயமின்றி தப்பினார்.

மஞ்சள் காமாலை தொற்று...
இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 16 பேருக்கு ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டு மற்ற நோயாளிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள்...
மண்ணடி சம்சுதீன், படப்பை மணிசங்கர், பல்லாவரம் பாஸ்கர், வால்டாக்ஸ் ரோடு கஜலட்சுமி, சென்னையை சேர்ந்த கோடீஸ்வரன், ஜெயலட்சுமி, வெங்கடேசன், சீனிவாசன், பாக்யராஜ், விழுப்புரம் மகாலிங்கம், மன்னார்குடி பாண்டியன், கரூர் - தோகைமலை மருதை, கும்பகோணம் கார்த்திக்கேயன், கிருஷ்ணகிரி லெனின்குமார், அருள் உள்ளிட்ட 16 பேர் தான் மஞ்சள் காமாலை தொற்றுக்கு ஆளானவர்கள்.

குற்றச்சாட்டு...
டயாலிசிஸ் செய்யப்படுவதற்கு முன்வரை இவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இல்லையென்றும், சரியாக சுத்திகரிக்கப் படாத ரத்தம் மூலமாகவே மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தார் குற்றம் சாட்டுகிறார்கள்.

அம்பலம்...
மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவர்களுக்கு 'இங்கு சிகிச்சை அளிக்க முடியாது. சென்னை ஓமந்தூர் தோட்டத்தில் செயல்படும் அரசு மல்டி ஸபெஷாலிட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்' என்று 16 பேரின் உறவினர்களிடம் டாக்டர்கள் சொல்ல, அப்போது தான் விசயம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஆம் ஆத்மி போராட்டம்...
இவர்களுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினர் கடந்த 25-ம் தேதி மருத்துவமனையை முற்றுகையிட பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 16 பேருக்கும் ஸடான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை...
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டால், விசாரணை நடந்து வருகிறது என மழுப்பலாக பதில் வருகிறது.












Click it and Unblock the Notifications