தோல்வியால் துவண்டு போன "ரத்தத்தின் ரத்தங்களே".. ரெடியா இருங்க.. வாரியத் தலைவர் பதவி வருது!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஒரு முக்கியமான வேலையில் படு பிசியாக இருப்பதாக சொல்கிறார்கள். அதுதான் வாரியத் தலைவர் பதவியை இறுதி செய்யும் வேலை.
அரசுகள் அமைந்ததுமே முதலில் அதிகாரிகள் மாற்றம் வரும். அடுத்து வாரியத் தலைவர் பதவி நியமனங்கள் பின் தொடரும். இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகத்தில் நடைபெறும் சம்பிரதாயம், சடங்கு.
அந்த வகையில் தற்போது 2வது முறையாக ஆட்சியமைத்துள்ள அதிமுக அரசிலும் இந்த சம்பிரதாயம் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. பிள்ளையார் சுழியாக ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குத் தலைவராக புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் பி.கே. வைரமுத்துவை ஜெயலலிதா நியமித்தார். தற்போது அடுத்த கட்ட வாரியத் தலைவர் பதவி நியமனங்கள் வெளியாகவுள்ளதாம்.

30 பதவிகள்
மொத்தம் 30 வாரியத் தலைவர் பதவிகளுக்குரியவர்களை முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்து வருகிறாராம். இதில் கடும் போட்டி காணப்படுகிறதாம். ஏகப்பட்ட ரெக்கமன்டேஷன்கள் வேறு இருக்கிறதாம். இருப்பினும் முதல்வர் ஜெயலலிதா இதில் நேரடியாக முடிவெடுக்கப் போவதால் ரெக்கமன்டேஷன் எடுபடாது என்கிறார்கள்.

யார் யாருக்கு?
யார் யாருக்கு வாரியத் தலைவர் பதவி கிடைக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் தோல்வி அடைந்த முக்கியஸ்தர்களுக்கும், வெற்றி பெற்ற முக்கியஸ்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார் ஜெயலலிதா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
குறிப்பாக உள்ளடி வேலைகளால் தோற்றுப் போன அதிமுகவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார் ஜெயலலிதா என்கிறார்கள். எனவே அது மாதிரியான தோல்வியைத் தழுவியவர்கள் வாரியத் தலைவர் பதவிக்காக காத்துள்ளார்களாம்.

சீட் கிடைக்காதவர்களுக்கும்
அதேபோல கடந்த சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்களாக இருந்து அதிமுகவில் ஐக்கியமாகி கடைசியில் எம்.எல்.ஏ சீட் கிடைக்காமல் ஏமாந்தவர்களில் சிலருக்கும் வாரியத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

சி.ஆர். சரஸ்வதி
கட்சியில் உள்ள சில சீனியர்களுக்கும் வாரியத் தலைவர் பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதாவது பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோருக்கு வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். அதேபோல சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட சிலரின் பெயர்களும் அடிபடுகின்றன.

உழைத்தவர்களுக்கே!
வாரியத் தலைவர் பதவிக்குரியவர்களை தேர்வு செய்வதில் முதல்வர் ஜெயலலிதா தனிக் கவனம் செலுத்தி வருகிறாராம். எனவே நிச்சயம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் கட்சியினர் மத்தியில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications