நடிகர் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஜெ. அறிவிப்பு
சென்னை: மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோ அருகில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.
சட்டசபையின் மூன்றாம் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரம் முடித்த உடன் சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கை:
நடிகர்களில் சிறப்பிடத்தைப் பெற்றவரும், "இந்து ராஜ்ஜியம்‛ என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக தந்தை பெரியார் அவர்களால் 'சிவாஜி கணேசன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவரும், 'நடிகர் திலகம்' என்று மக்களால் போற்றப்பட்டவரும், ‘கலைமாமணி', ‘பத்ம ஸ்ரீ', ‘பத்மபூஷன்', ‘செவாலியே', ‘தாதா சாகேப் பால்கே விருது' ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரரும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்', ‘கப்பலோட்டிய தமிழன்', போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்து, அவர்களின் பங்களிப்பினை திரைப்படங்கள் மூலம், பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றவருமான மறைந்த சிவாஜி கணேசன் அவர்களின் கலைச் சேவையை பாராட்டிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில், சென்னை மாவட்டம், அடையாறு பகுதி சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தினை தென்னியதிய நடிகர் சங்கத்திற்கு வழங்கிட 26.9.2002 அன்று நான் உத்தரவிட்டேன்.

இடம் ஒதுக்கீடு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கித் தரும்படி, கேட்டுக் கொண்டதன் பேரில் நான் இந்த உத்தரவை வழங்கினேன். அதன் பேரில் மைலாப்பூர் வட்டாட்சியர் அவர்களால் இந்த இடம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடத்தின் ஊடே நீதியரசர்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால், நீதியரசர்கள் குடியிருப்புக்குச் செல்ல தனியே சாலை அமைப்பதன் செலவான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்திட வேண்டுமென அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சுற்றுச்சுவர்
தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க இயலும் என தெரிவித்து அதனை 26.7.2004 அன்று வழங்கினர். எனவே, புதிய அணுகு சாலையை அமைப்பதற்கான மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றை 13.2.2006 அன்று எனது தலைமையிலான அரசே அமைத்தது.

மணிமண்டபம்
தென்னிந்திய நடிகர் சங்கம், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் எனது தலைமையிலான அப்போதைய அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னியதிய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் நான் அப்போதே வழங்கியிருப்பேன்.

சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை
சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக எனது அரசால் வழங்கப்பட்ட இடத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இதுவரை நினைவகம் அமைக்கப்படவில்லை. அந்த இடத்தில் தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு மணிமண்டபம்
எனவே, சிவாஜி கணேசன் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

எம்.எல்.ஏக்கள் பாராட்டு
சிவாஜிக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து முதல்வர் அறிவித்த உடன் அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதோடு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications