முழு உடல் பரிசோதனை திட்டம், புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி: முதல்வர் அறிவிப்பு
சென்னை: முழு உடல் பரிசோதனை திட்டம் தொடங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி, தென் தமிழகத்தில் பல்மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேற்றுக் கூடிய தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார் அப்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.
ரத்த சேமிப்பு மையங்கள்
12.12 கோடி ரூபாய் செலவில் 12 ரத்த ரத்த சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும். 6 கோடி ரூபாய் செலவில் 10 ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
அடையாறு புற்றுநோய் சிகிச்சை
ரூ.120 கோடி செலவில் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் தரம் உயர்த்தப்படும். மருத்துவக் கல்லூரிகளுக்கு 1.60 கோடி ரூபாய் செலவில் அவசர ஊர்திகள் வாங்கப்படும்
செவிலியருக்கு விடுதி
172 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 இடங்களில் செவிலியருக்கான விடுதிகள் அமைக்கப்படும். ராஜபாளையத்தில் 20 படுக்கையறைகளை கொண்ட சிறுவர்களுக்கான மருத்துவமனை அமைக்கப்படும்
அரசு மருத்துவக்கல்லூரி
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். தென் தமிழகத்தில் ரூபாய் 50 கோடியில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
அம்மா உடல் பரிசோதனை
குறைந்த கட்டணத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் தொடங்கப்படும். முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். பெண்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனைத் திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.