சவுதியில் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ. 5லட்சம் – உடலை கொண்டு வர மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் மதிவளனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மீனவரின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட பொழிகரையை சேர்ந்த மீனவர் மதிவளன் சவுதி அரேபியா கடலில் 7 பேருடன் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஆசாமிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சவூதி அரேபியா நாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டம், பொழிக்கரை கிராமத்தினை சேர்ந்த சிலுவையின் மகன் மதிவளன், 29.5.2015 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏழு மீனவர்களுடன் சவூதி அரேபியா நாட்டின் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்து நான் ஆழ்ந்த துயரம் அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த மீனவர் மதிவளன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மரணமடைந்த மதிவளனின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவர் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து அவரது குடும்பத்திற்கு இறுதி பணப் பயன்களை பெற்றுதர இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பாரதப் பிரதமர் மோடியை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் மதிவளனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மோடிக்குக் கடிதம்
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், சவுதி அரேபியாவில் அடையாளம் தெரியாத ஆசாமிகளால் மீனவர் மதிவளன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சவுதி அரேபியாவில் ஜூபையில் என்ற இடத்தில் உள்ள முகமது முபாரக் பாகுத் என்பவருக்கு சொந்தமான 'சுபியல் சுர்கீ' என்ற படகில் சென்று மீன்பிடித்த போது சுடப்பட்டார். அவருடன் சென்ற 7 பேரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.
சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் மதிவளனின் உடல் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இந்த மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு மீன்பிடி தொழில் செய்து வந்தனர். ஒன்றும் அறியாத மீனவர்கள் ஏழ்மை நிலை காரணமாக பிழைப்புக்காக மீன்பிடி தொழிலாளர்களாக குடும்பத்தை காப்பாற்ற சவுதி அரேபியாவுக்கு ஒப்பந்த அடிப்படையில் சென்றுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் மதிவளன் இறப்பால் அவரது குடும்பம் துயரம் அடைந்துள்ளது. அவரது உடலை விரைவாக கொண்டுவரவும் முடியாத நிலை உள்ளது. எனவே, சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நேரடியாக தொடர்பு கொண்டு அவரது உடலை கொண்டு வர உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து முழு பணப்பயன்களை பெற்று தரவும் இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.