களமிறங்குகிறார் ஜெ... களைகட்டுகிறது ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரம்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வருகிற 22-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுபட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து 28 பேர் போட்டியிடுகின்றனர்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த அறிவிப்பை அதிமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

அந்த அறிவிப்பு:
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, வருகிற 22-ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியின் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். தனது பிரசாரத்தை, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து தொடங்குகிறார்.
இதன் பிறகு காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு, வீரராகவன் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் சாலை சந்திப்பு, அருணாசலேஸ்வரர் கோயில் தெரு ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் வாக்காளர்களிடையே பேசுகிறார்.
அதன்பிறகு வைத்தியநாதன் சாலை, வைத்தியநாதன் பாலம் ஆகிய இடங்கள் வழியாகச் சென்று எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பில் உரையாற்றுகிறார்.
இதையடுத்து, எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை எழில் நகர் ஆகிய இடங்களில் வாக்குகளைச் சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications