ஜெ. மரண விசாரணை: சசிகலாவிடம் 2,956 பக்க ஆவணங்கள் அளிக்கப்பட்டது
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இந்தவாரம் நடைபெறவிருந்த விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் அளித்துள்ளது. இந்த ஆவணங்களை படித்துவிட்டு 15 நாட்களுக்குள் பிரமானப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி கடந்த மாதம் தனது விசாரணையை தொடங்கினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார் என்று கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர முடியும் என்று நீதிபதி ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட ஆணையம் சசிகலா கேட்ட புகார்தாரர் குறித்த விவரங்களை தர தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் அளித்துள்ளது. இந்த ஆவணங்களை படித்துவிட்டு 15 நாட்களுக்குள் பிரமானப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இந்தவாரம் நடைபெறவிருந்த விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நீதிபதி ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்தவாரம் நடைபெறவிருந்த விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி ஆறுமுகசாமி கோவையில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கார் டிரைவர் கண்ணன் நாளையும், ஜெயா டி.வி. சி.இ.ஓ. விவேக் ஜெயராமன் நாளை மறுநாளும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதேபோன்று ஜெயலலிதாவின் சமையல்காரர் சேகர் ஆகியோரிடம் மார்ச் 6ஆம் தேதிக்குப் பின் விசாரணை நடைபெறும் என்றும், எந்தெந்த தினங்களில் ஆஜராவது என்பது குறித்த புதிய சம்மன்கள் இன்று மாலை அனுப்பப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications