தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாத ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்புங்கள்: கருணாநிதி
சென்னை: சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது ஆட்சியாளர்கள் அதை பற்றி கவலைப்படமால் தூங்கி கொண்டிருந்தனர் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டாக தமிழக மக்களைப் பற்றி ஜெயலலிதா கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாபேட்டையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த ரமேஷ், சைதாபேட்டை மா.சுப்பிரமணியன், வேளச்சேரி சந்திரசேகர், ஆலந்தூர் தா.மோ.அன்பரசன், விருகம்பாக்கம் தனசேகரன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி சைதாபேட்டையில் வாக்கு சேகரித்தார்.
பிரச்சார கூட்டத்தில் பேசிய கருணாநிதி, உங்களின் இனிய முகங்களை காணும் போது மகிழ்ச்சி அளிக்கிறது . நீங்கள் எங்களுக்கு தரப்போகின்ற பரிசு வெற்றி. இந்த நாட்டிற்காக உழைக்கும் அண்ணாவின் அன்பு தம்பிகள் தான் இவர்கள்.

இந்த தொகுதியில் போட்டியிடுபவர்கள் நான் போட்டியிடுவதாக அர்த்தம். இவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த தேர்தலில் திமுக கூட்டணி பெரிய வெற்றியை பெறும் என்று கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளாக வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை பற்றி கவலைப்படாதவர்கள் ஆளும் கட்சியினர். சென்னையில் வெள்ளம் வந்த போது, மக்களை திமுக-வினர் காப்பாற்றினர். ஆனால், வெள்ளம் நிவாரணப் பணிகளை பார்வையிட கூட வராதவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததில் ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று கூறினார்.
செம்பரம்பாக்கம் நீர்த் திறப்பு குறித்து எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை. ஐந்து ஆண்டுகாலமாக மக்கள் அளவற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மக்களைப்பற்றி கவலைப்படாமல் ஹெலிகாப்டரில் பயணம் செய்து வரும் எதேச்சதிகாரத்தை எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக்கொண்டிருப்பது.
சக்தியற்றவனாக இருக்கும் எனக்கு வெற்றியை தந்து இந்த தேர்தலில் சக்தி வழங்க வேண்டும். இவர்களுக்கு தான் இந்த ஆட்சி சொந்தமா? இவர்களுக்குத்தான் என பட்டா போட்டு கொடுத்துள்ளோம்? என்று கேட்டார் கருணாநிதி.

மாற்றம் தேவை, மாற்றம் என்றால் ஏமாற்றத்தை கொண்டு வந்து விடாதீர்கள். ஏமாற்றம் எது வேண்டுமானாலும் செய்யலாம். மக்களின் ஆதரவை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
ஒருவருக்கொருவர் நட்போடு பழகி ஒத்துழைப்புடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியினருடன் ( கம்யூனிஸ்ட் என்று கூறி காங்கிரஸ் என்று சமாளித்தார்) இணைந்து பாடுபடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் கருணாநிதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications