அதிமுக வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா வழங்கிய சாதனை சிடி
சென்னை: அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஒரு சிடியை வழங்கியுள்ளார்.
வரும் ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.
மேலும், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு வந்தனர். அவர்கள் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
அப்போது ஆசி பெற்ற அனைவருக்கும் ஜெயலலிதா தனது கரங்களாலேயே ஒரு சிடியை வழங்கியுள்ளார். அந்த சிடியில் அதிமுக அரசின் சாதனைகளும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் இடம் பெற்றுள்ளதாம்.
இதை ஒவ்வொரு வேட்பாளரும், தங்கள் தொகுதியில் பொது மக்களுக்கு தெரியும் அளவு விளம்பரம் செய்ய வேண்டும் அல்லது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் செல்லும் அளவு சிடியை அப்படியே காப்பி போட்டு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம்.
இதனால் தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஜெயலலிதாவின் குரலை கேட்கலாம். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினரின் வாக்குகளும் அதிமுக பக்கம் சாயும் என அதிமுக கணக்கு போட்டுள்ளது.