பக்ரைனில் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மீனவர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: பக்ரைன் நாட்டில் கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கன்னியாகுமரி மீனவர் தாமஸின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பக்ரைன் நாட்டில் விசைப்படகு ஒன்றில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த ஏழு மீனவர்களில், கன்னியாகுமரி மாவட்டம், ராஜக்கமங்கலம் துறை பகுதியைச் சேர்ந்த மீனவர் எஸ்.தாமஸ் கிளேட்டஸ் கடந்த 21-ந் தேதி அன்று கடல் கொள்ளையர்களால் சுடப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இத்துப்பாக்கிசூட்டில் அகால மரணமடைந்த மீனவர் தாமஸ் கிளேட்டஸின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த செய்தி குறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக பக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, இறந்த மீனவர் தாமஸ் கிளேட்டஸ் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் தாமஸ் கிளேட்டஸ் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.