"நம்பர் 2" ஆகப் போறாராமே "சின்ன அம்மா" சசிகலா??
சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படவுள்ளது, என்ன அறிவிக்கப் போகிறார் ஜெயலலிதா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அவ்வளாக இல்லை என்ற போதிலும் அதிமுகவினர் மத்தியில் ஏகமாகவே உள்ளது. இதில் முக்கியாக சசிகலாவுக்கு முக்கியப் பொறுப்பு கொடுத்து ஜெயலலிதா அறிவிப்பு வெளியிடுவார் என்று பேச ஆரம்பித்துள்ளனர் அதிமுகவினர்.
இந்த நேரத்தில் சசிகலா குறித்த ஒரு பிளாஷ்பேக் நமக்கு ஞாபகம் வருகிறது. இது மற்றவர்களுக்கும் நினைவில் இருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. பலர் மறந்திருக்கலாம்.
இந்த மறதிதான் தேசிய வியாதியாச்சே.. அந்த வகையில் சசிகலா குறித்த ஒரு குட்டி பிளாஷ்பேக் இது.

2011ல்
அது 2011ம் ஆண்டு. ஜெயலலிதா அப்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் படு சுறுசுறுப்பாக இருந்த நேரம். கட்சியில், "அம்மா"வைக் கண்டு அத்தனை பேரும் நடுங்கிய சமயமும் கூட. அப்போதுதான் ஒரு அதிரடி காட்டினார் ஜெயலலிதா.

சசிகலா நீக்கம்
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் கட்சியை விட்டு நீக்கி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. இதை அதிமுகவினரே எதிர்பார்க்கவில்லை. அதேபோல சசிகலாவுக்கு நெருக்கமான அதிகாரிகளும் கூட தப்பவில்லை. அத்தனை பேரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

12வது நாளில் பரபரப்புப் பேச்சு
இந்த நீக்கத்திற்குப் பின்னர் 12 நாள் கழித்து அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் பிரமாண்டமாக கூட்டப்பட்டது. அதில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் அனல் பறந்தது.

தவறு செய்வோரில் 2 ரகம்
ஜெயலலிதா பேசுகையில், தவறு செய்வோர், துரோகம் செய்வோர் நீக்கப்படுகிறார்கள். இவர்களில் சிலர் அமைதியாக உள்ளனர். சிலரோ இன்னும் நாங்கள் செல்வாக்குடன்தான் உள்ளோம். விரைவில் மன்னிப்பு பெற்று வந்து விடுவோம். எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பழிவாங்குவோம் என்று மிரட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அவர்களை நம்பி செயல்படுகிறவர்களுக்கும் மன்னிப்பு கிடையாது என்று முழங்கினார் ஜெயலலிதா.

போன மச்சான் திரும்பி வந்தான்
இவர் இப்படி அதிரடியாக பேசிய அடுத்த சில நாட்களிலேயே சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் மன்னித்து கட்சிக்குள் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா. அதன் பின்னர்தான் சசிகலா குடும்பம் மேலும் பலமடைந்தது.

மீண்டும் விஸ்வரூபம்
அதிமுகவின் அதிகாரப்பூரவமற்ற அதிகார சக்தியாக விளங்கி வரும் சசிகலாவை தற்போது முறைப்படி கட்சியில் பதவி கொடுத்து அழகு பார்க்க ஜெயலலிதா முடிவெடுத்து விட்டதாக சொல்கிறார்கள்.

என்ன பதவி?
டிசம்பர் 31ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் சசிகலாவுக்கு முக்கியப் பொறுப்பை, அதாவது தனக்கு அடுத்த நிலையிலான பொறுப்பை ஜெயலலிதா அறிவிக்கப் போவதாக அதிமுகவினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
என்ன நடக்கப் போகிறதோ?












Click it and Unblock the Notifications