விஜயபாஸ்கருக்கு "செக்" + அதிமுக ஆட்சியின் முதல் வாரியத் தலைவர்... புன்னகைக்கும் வைரமுத்து!
சென்னை: அதிமுக ஆட்சி மீண்டும் பதவியில் அமர்ந்ததும் வாரியத் தலைவர் பதவி பெற்ற முதல் கட்சிக்காரர் என்ற பெயரை புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் வைரமுத்து பெற்றுள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், வைரமுத்துவுக்கும் மாவடத்தில் "டக் ஆப் வார்" உச்சத்தில் உள்ளது. தேர்தலுக்கு முன்புதான் விஜயபாஸ்கர் தனது மாவட்டச் செயலாளர் பதவியை இழந்தார். அந்தப் பதவியை வைரமுத்துவிடம் கொடுத்தார் ஜெயலலிதா. இதனால் வைரமுத்துவை வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய பாஸ்கர் என்று ஊருக்குள் ஏற்கனவே பேச்சு உண்டு.

இந்த நிலையில்தான் தேர்தலில் முத்தரையர்கள் சமூகத்தின் ரூபத்தில் விஜயபாஸ்கருக்கு பெரும் சிக்கல் வந்தது. முத்தரையர் சமூகத்தை இழிவாகப் பேசி அவர்களின் மொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார் விஜயபாஸ்கர். இதனால் அவர்கள் அதிகமாக உள்ள புதுக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட முடியாமல் விராலிமலைக்கு வந்து போட்டியிட்டு வென்றார் விஜய பாஸ்கர்.
புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட கார்த்திக் தொண்டமான் தோல்வியுற்றார். அதேபோல திருமயம் தொகுதியில் போட்டியிட்ட வைரமுத்துவும் முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம் வெறும் 766 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். தோல்வி தந்த அதிர்ச்சியிலும், பிரச்சினைகளுக்குக் காரணமான விஜயபாஸ்கர் ஜெயித்த அதிர்ச்சியிலும் புதுக்கோட்டையை விட்டு நகராமல் வீட்டோடு முடங்கியிருந்தார் வைரமுத்து.
இந்த நிலையில்தான் போயஸ் தோட்டத்திலிருந்து வைரமுத்துவுக்கு அழைப்பு வந்தது. சரிதான், மாவட்டச் செயலாளர் பதவியும் போகப் போகிறது போல என்று எண்ணிக் கொண்டு போனவருக்கு வாரியத் தலைவர் பதவியை பரிசாக கொடுத்து அனுப்பி ஆறுதல் சொல்லி அனுப்பியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக வைரமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததும் நியமிக்கப்பட்ட முதல்வர் வாரியத் தலைவர் பதவி இதுதான் என்பதால் தனக்கு கட்சி மேலிடத்திலும், ஜெயலலிதாவின் மனதிலும் நல்ல பெயர் நீடிப்பதாக உற்சாகமடைந்துள்ளாராம் வைரமுத்து. அதேசமயம், விஜயபாஸ்கர் தரப்பு ஷாக்காகியுள்ளதாம்.
விராலிமலையில் ஜெயித்ததாலும், மீண்டும் அமைச்சராகி விட்டதாலும், அடுத்து மாவட்டச் செயலாளர் பதவி வந்து சேரும் என்று விஜயபாஸ்கர் தரப்பு பெரும் ஆர்வத்தில் இருந்தது. ஆனால் வைரமுத்துவிடமிருந்து பதவியைப் பறிக்காமல் கூடுதலாக வாரியத் தலைவர் பதவியையும் ஜெயலலிதா கொடுத்திருப்பது விஜயபாஸ்கர் தரப்பை பீதிக்குள்ளாக்கியுள்ளதாம்.
புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி தொகுதிகளில் முத்தரயைர் வாக்குகள் அதிகம். இங்கெல்லாம் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளது. இதற்குக் காரணம் விஜயபாஸ்கரின் பேச்சுதான். இதை ஜெயலலிதாவும் உணர்ந்துள்ளார். இதனால்தான் தோல்வி அடைந்தவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பதவியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள்.
அதேசமயம், விஜயபாஸ்கர் எந்த நிலையிலும் தான்தான் இனி எல்லாம் என்ற உணர்வுக்கு வந்து விடக் கூடாது என்பதிலும் ஜெயலலிதா கவனமாக உள்ளார் என்பதையும் இது காட்டுவதாகவும் அதிமுகவினர் கூறுகிறார்கள். மொத்தத்தில் விஜயபாஸ்கர் ஆட்டம் போட்டு விடக் கூடாது என்பதற்காக ஜெயலலிதா போட்டுள்ள ஸ்பீடு பிரேக்கர் இது என்கிறார்கள் உள்ளூர் அதிமுகவினர்.
அதுசரி, "அம்மா"வுக்குத்தானே தெரியும் தனது "பிள்ளைக"ளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது!












Click it and Unblock the Notifications