நில ஆர்ஜித சட்டத்தில் சில அம்சங்களுக்கு தமிழக அரசு திடீர் எதிர்ப்பு!
சென்னை: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் தமிழக விவசாயிகள் எதிர்க்கும் சில அம்சங்களை நீக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் அண்ணா திமுக, லோக்சபாவில் இந்த சட்டத்துக்கு ஆதரவு அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த சட்டத்தின் சில பிரிவுகளுக்கு திடீரென கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மாநில சுயாட்சி...
அதில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
நிலச் சட்டத்தை பொருத்தவரை, தமிழக அரசு மாநில சுயாட்சி பாதிக்கப்படக் கூடாது என்பதிலும், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் எப்போதுமே கவனமாக இருந்திருக்கிறது.

மாநில அரசுகளுடன்..
நிலச் சட்டத்ததில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது இந்திய அரசானது அரசியல சாசன விதிமுறைகளை மீறி மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் அத்துமீறியிருக்கிறது என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
மக்களுடன் அதிக நெருக்கத்தில் இருப்பது மாநில அரசுகளே. எனவேதான் நிலம் தொடர்பான விவகாரங்களை நிர்வகிக்கும் அதிகாரங்களை மாநில அரசிடமே அளித்து அரசியல் சாசனம் வழிவகை செய்திருக்கிறது.

ஏன் எதிர்ப்பு
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ஆரம்பம் முதல் நிலச் சட்டம் தொடர்பான அனைத்து விவாதங்களிலும் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபட தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே தனியார் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என ஆரம்பம் முதல் வலியுறுத்திவருகிறோம்.
இந்தக் கோரிக்கையை ஏற்பதாக இந்திய அரசு தெரிவித்தமையாலேயே எனது உத்தரவின்பேரில் கடந்த 10.3.2015 அன்று மக்களவையில் நிலச் சட்டத்தை அதிமுக ஆதரித்தது.

திருத்தத்தை கைவிடுக..
இருப்பினும், நிலச் சட்டத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பரிந்துரைகளை தமிழக விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். எனவே, தமிழக அரசு இந்தத் திருத்தத்தை எதிர்க்கிறது. எனவே குறிப்பிட்ட அந்தத் திருத்ததை மத்திய அரசு கைவிடும் என நம்புகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications