பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை– ரூ.5 லட்சம் நிதி: ஜெயலலிதா
சென்னை: தேனியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு வேலையும், ரூ.5லட்சம் நிதி உதவியும் அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல்-அமைச்சரின் தனிப் பிரிவிற்கு அளித்த மனுவில், தனது பெற்றோர் தன்னை பத்து ஆண்டுகளுக்கு முன்பு விட்டுச் சென்றதாகவும், 16.2.2014 அன்று சதீஷ்குமார் என்பவர் தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகத் தாக்கி, நடுக்காட்டில் போட்டு விட்டு சென்றுவிட்டதாகவும், மயக்க நிலையில் இருந்த தன்னை உறவினர்கள் தேடிக் கண்டுபிடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்ததாகவும் தெரிவித்து, தன்னுடைய துர்ப்பாக்கிய நிலையைக் கருத்தில் கொண்டு, தன் மீது கருணை வைத்து உதவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு
இதனைக் கருணையுடன் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, இது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்புமாறு தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.
தனித்து விடப்பட்ட பெண்
விசாரணை அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண் சிறு வயதாக இருக்கும்போதே, அவரது தந்தை மற்றும் தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்தனியாக சென்று விட்டபடியால் தனித்து விடப்பட்ட நிலையில் அப்பெண் அவரது பெரியப்பா வீட்டில் வளர்ப்பு மகளாக வளர்ந்து வந்துள்ளார்.
இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு பெரிய குளத்தில் ஒரு பள்ளியில் தற்காலிகமாக குழந்தைகளைப் பராமரிக்கும் பணியைப் பார்த்து வந்தார்.
பாலியல் வன்கொடுமை
கடந்த 16.2.2014 அன்று இ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்பவரின் மகன் சதீஷ்குமார், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு, சரமாரியாகத் தாக்கி, பற்களை உடைத்து இவரது முகம், இடது தோள்பட்டை முதலான இடங்களில் கொடுங்காயங்களை ஏற்படுத்தியபின் தப்பி ஓடி விட்டார் என்பதும்; இந்தத் தாக்குதலில் மயக்கமடைந்து இரவு முழுவதும் கரும்பு தோட்டத்திற்குள் கிடந்த பெண்ணை 17.2.2014 அன்று அவரது உறவினர்கள் பெரிய குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற ஏற்பாடு செய்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
சதீஷ்குமார் கைது
இந்த நிகழ்வு குறித்து வடகரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றவாளி சதீஷ்குமார் 17.2.2014 அன்றே கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் காவல் துறையினரால் புலன் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் சதீஷ்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு வேலை
தாய், தந்தை ஆதரவின்றி வளர்ந்து, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, வசதிகள் ஏதுமில்லாமல், ஆதரவற்ற நிலையில் இருந்து வரும் இளம் பெண்ணின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு கருணை அடிப்படையில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும், அரசு வேலை வாய்ப்பிற்கான ஆணையினையும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் வழங்கினார்கள்.
இளம் பெண் நன்றி
இதனைப் பெற்றுக் கொண்ட பாதிக்கப்பட்ட பெண், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை கண்ணீர் மல்க தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications