தேவர், எம்.ஜி.ஆர்... இப்போது அண்ணா.. ஜெயலலிதாவின் "ஒர்க்கிங் ஃபிரம் ஹோம்" தொடர்கிறது!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டிலிருந்தபடியே தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்கிறது.
முத்துராமலிங்கத் தேவர், எம்.ஜி.ஆர். ஆகியோரைத் தொடர்ந்து இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி தனது இல்லத்தில் வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இன்று திமுகவின் நிறுவனரும், மறைந்த முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 46-வது நினைவு தினமாகும். இதையொட்டி திராவிடக் கட்சிகள் சார்பில் அண்ணாவுக்கு நினைவாஞ்சலி செலுத்தப்பட்டது.

வீட்டிலிருந்தபடியே வணங்கிய ஜெயலலிதா
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவ படத்திற்கு மலர்தூவி ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார்.
அவர் சிறைக்குப் போய் விட்டுத் திரும்பியது முதலே வீட்டிலேயேதான் இருந்து வருகிறார். வெளியே வருவதில்லை. வீட்டில் இருந்தபடியே தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளின்போது அஞ்சலி செலுத்துகிறார்.
தேவர் ஜெயந்தி, எம்.ஜி.ஆர். பிறந்த நாள் ஆகியவற்றுக்கும் வீட்டிலிருந்தபடியேதான் அவர் அஞ்சலி செலுத்தினார். இன்று அண்ணாவுக்கும் வீட்டில் இருந்தபடியே அவர் அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி - திமுக அஞ்சலி
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா நினைவிடத்துக்கு திமுகவினர் மவுன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் காரில் வந்தனர். பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நடந்து சென்றனர். அண்ணா நினைவிடத்தை வந்து அடைந்ததும் கருணாநிதி அண்ணா சமாதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அன்பழகன், மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி
அண்ணா நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் அதன் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், அதிமுகவினர் இன்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். காலை 10.20 மணிக்கு முதல்வர் பன்னீர் செல்வம் அண்ணா நினைவிடத்துக்கு வந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வமும், மதுசூதனனும் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications