ராமதாஸை சிறைக்குள் வைத்து கொல்ல திட்டமிட்ட ஜெயலலிதா: காடுவெட்டி குரு பகீர் தகவல்
அரியலூர்: சிறைக்குள் வைத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை கொலை செய்ய முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டதாக பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு தெரிவித்துள்ளார்.
அரியலூரில் பாமக மகளிர் எழுச்சி மாநாடு நேற்று இரவு நடந்தது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில வன்னியர் சங்க தலைவரும், எம்.எல்.ஏ.வுமான காடுவெட்டி குரு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய குரு கூறுகையில்,
கொலை சதி
மரக்காணம் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸை சிறைக்குள் வைத்து கொலை செய்ய ஜெயலலிதா திட்டமிட்டார். ராமதாஸை சிறையில் சித்ரவதை செய்தனர். அதை எல்லாம் தாண்டி தான் அவர் வெளியே வந்துள்ளார் என்றார் குரு.
ராமதாஸ்
ராமதாஸ் பேசுகையில், ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்பட்டுத்தப்பட்ட நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் அளிக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை விடுத்தோம். தற்போது நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளதால் ஏக்கருக்கு ரூ.1 கோடி அளிக்க வேண்டும்.
வாக்குறுதி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் சாமாண்ய மக்களுக்கும் உயர்தர மருத்துவ வசதி இலவசமாக கிடைக்க செய்வோம். சிபிஎஸ்சி படிப்பு உள்பட மேல்நிலை படிப்பு வரை இலவசமாக கல்வி கிடைக்க வழிவகை செய்வோம். விதை, உரம் மற்றும் விவசாய எந்திரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவோம் என்றார் ராமதாஸ்.
ஜாதி தாஸ்
நான் ஒன்றும் காதலுக்கு எதிரி அல்ல. பாதிக்கப்படும் எங்கள் குல பெண்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் என்னை ஜாதி தாஸ் என்கிறார். எனக்கு தமிழ் குடி தாங்கி பட்டம் கொடுத்தபோது நான் ஜாதி தாஸ் என்று அவருக்குதெரியவில்லையா. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமகவை பெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.