உள்ளாட்சி தேர்தல்... வியூகம் வகுக்கும் ஜெயலலிதா...
சென்னை: சட்டசபை தேர்தலில் தப்பித்தவறி கூட உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவின் ஆதிக்கம் அதிகரித்து விடக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடும் உத்தரவு போட்டுள்ளாராம்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில்தான் தமிழகக் கட்சிகளின் கவனம் குவிந்திருக்கிறது.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து ஆளும் கட்சியான அதிமுகவும், தோல்வியடைந்த எதிர்கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்றுதான் வியூகம் வகுக்கத் தொடங்கியுள்ளன.
சட்டசபைக்கு திமுக பலமான எதிர்கட்சியாக நுழைந்தது போல உள்ளாட்சிகளிலும் தலையெடுத்து விடக்கூடாது என்பதில் முதல்வர் ஜெயலலிதா கவனமாகவே இருக்கிறாராம்.
உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்துள்ள ஜெயலலிதா, அதை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் 12 மாநகராட்சிகளில், 6 மாநகராட்சிகளை பெண் மேயர்களுக்கான மாநகராட்சிகளா ஆக்குவதோடு, தமிழக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சிப் பதவிகளிலும், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதால் அதிமுகவின் மகளிரணி பரபரப்பாகியுள்ளது.
அக்டோபரில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய மகளிரணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறதாம். மகளிரணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் வேட்பாளர்கள் தேர்வில் ஜரூரா களமிறங்கி விட்டாராம்.
அ.தி.மு.கவில் மகளிரணி வலுவாக இருக்கிறது. அதோடு இளம்பெண்கள் பாசறையும் வீடு வீடுவாக சென்று வாக்கு சேகரித்து பெண்களோட வாக்குகளை இரட்டை இலை பக்கம் கொண்டு வந்து விடுகின்றனர்.
அதிமுக அளவுக்கு திமுக மகளிரணியில் வேலைகள் நடப்பதில்லையாம். கனிமொழி தலைமையில் மகளிரணி செயல்படுவதால ஸ்டாலின் தரப்பின் ஆதரவும் கிடைப்பதில்லையாம்.
மேலும் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் என்பதால் அதுவும் அதிமுகவிற்கு சாதகமா அமையும் என்று கணக்கு போட்டு இப்போதே காய் நகர்த்த ஆரம்பித்து விட்டாராம் ஜெயலலிதா.
நேற்றுதான் தமிழக தலைமைச் செயலாளர் தொடங்கி, பல்வேறு துறைச் செயலாளர்கள் வரை மாற்றப்பட்டதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்ததாக, தமிழக காவல்துறையில் மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்.
தமிழக அரசியல்வாதிகள், தமிழக மக்கள் என எல்லா தரப்பினரும் ஆச்சர்யப்படும் அளவில் தமிழக காவல்துறை அதிகாரிகளை அதிரடி மாற்றம் செய்யப் போகிறாராம் ஜெயலலிதா. தமிழக காவல்துறையில் இப்போது இதுதான் ஹாட் டாபிக் ஆக பேசப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக, பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளின் பைல்களைப் பார்த்து இடமாற்றத்துக்கு ரெடி செய்து வருகிறார்கள். வரும் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து இந்த மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் இதுவரை இல்லாத அளவுக்கு சூடு கிளம்பும் என்றே தெரிகிறது கூறப்படுகிறது. ஒரே ஊரில் உள்ளாட்சி பதவிகளில் மாமன் மச்சான்கள், அண்ணன், தம்பிகள் எதிர் எதிர் அணியில் போட்டியிட்டு பட்டையை கிளப்புவார்கள். வெற்றி தோல்வி கட்சியை பாதிக்குமோ இல்லையோ உறவுகளுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.