குமாரசாமியின் "தப்புத்தாளங்கள்".. விடுதலையான ஜெயலலிதா.. மே மாத பரபரப்பு!
சென்னை: ஜெயலலிதா விடுதலை.. இதுதான் மே மாதத்தில் நாட்டையே உலுக்கிய பரபரப்புச் செய்தி. அதை விட மிகப் பெரிய ஷாக்.. நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் இமயமலை அளவுக்கு இருந்த கணிதப் பிழை.
ஜெயலலிதா விடுதலைச் செய்தி தமிழக மக்களை மட்டுமல்லாமல், நாட்டு மக்களையும் கூட பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர நடிகர் சல்மான் கான் கார் விபத்து வழக்கில் 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட அதே கையோடு அவர் ஜாமீனிலும் வெளியாகி ஷாக் கொடுத்தார்.
டயானாவுக்குப் பேத்தி
மே 2ம் தேதி மறைந்த இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸ் தம்பதிகளின் மகன் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை
மே 6ம் தேதி 2002ம் ஆண்டு நடந்த கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று அறிவித்த மும்பை விசாரணை நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால் உடனடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி இந்தத் தீர்ப்புக்குத் தடை வாங்கி ஜெயிலுக்கே போகாமல் தப்பினார் சல்மான் கான்.
கேமரூனுக்கு மீண்டும் வெற்றி
மே 8ம் தேதி இங்கிலாந்து தேர்தலில் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் தலைமையிலான கட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
எம்.ஆர். ராதாவின் கொள்ளுப் பேரன் மரணம்
மறைந்த எம்.ஆர். ராதாவின் கொள்ளுப் பேரனும், எம்.ஆர்.ஆர். வாசுவின் மகனுமான எம்.ஆர்.ஆர். வாசு சதீஷ் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார்.
விடுதலையானார் ஜெயலலிதா
மே 11ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பை அளித்தது. உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி சர்ச்சைக்குரிய தீர்ப்பை அளித்தார்.
முதல்வர் படங்களுக்குத் தடை
மே 13ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடித் தீர்ப்பில், அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், நீதிபதிகளின் படங்கள் மட்டுமே இடம் பெறலாம், முதல்வர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் படங்கள் இடம் பெறக் கூடாது என்று அதிரடி உத்தரவிட்டது.
அனிதா - கருப்பசாமி பாண்டியன் நீக்கம்
மே 14ம் தேதி திமுகவிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன், கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
மோர்சிக்கு மரண தண்டனை
மே 16ம் தேதி எகிப்து நாட்டின் முதலாவது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி முகம்மது மோர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. ராஜினாமா
மே 17ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக அத்தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அருணா ஷன்பக் மரணம்
மே 18ம் தேதி, பாலியல் பலாத்காரக் கொடுமைக்குள்ளாகி 1973ம் ஆண்டு முதல் கோமாவில் இருந்து வந்த நர்ஸ் அருணா ஷன்பக் தனது 67 வது வயதில் மும்பை மருத்துவமனையில் மரணமடைந்தார்.
திருமா.வின் உதவியாளர் படுகொலை
மே 20ம் தேதி சென்னை மடிப்பாக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் உதவியாளர் வெற்றிச் செல்வனை உறவினர்களே கூலிப்படையை வைத்துக் கொலை செய்தனர்.
மீண்டும் ஜெ. முதல்வர்
மே 22ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்க அனுமதி கோரி ஆளுநர் ரோசய்யாவை அமைச்சரவைப் பட்டியலுடன் ஜெயலலிதா சந்தித்து அனுமதி கோரினார். 23ம் தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.