தமிழகத்துக்கு ரூ.41,408 கோடி மானியம்: நிதிக்குழுவிடம் ஜெ. கோரிக்கை!
சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்காக 41,408 கோடி ரூபாய் நிதியை மானியமாக அளிக்க, 14வது நிதிக்குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.
நிதிக்குழு தலைவர் ஒய்.வி.ரெட்டி தலைமையில் 14வது நிதிக்குழு தமிழகத்தில் முகாமிட்டுள்ளது. இரண்டு நாட்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் அந்தக் குழு ஆலோசனை நடத்துகிறது.
முதல் நாள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ''அரசியலமைப்புச் சட்டத்தைத் தோற்றுவிக்கப்பட்டு 63 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா இப்போது மிகவும் நம்பிக்கையான, ஜனநாயகத்தில் மிகவும் முதிர்ந்த நாடாகவும் திகழ்கிறது. ஆனாலும், பொருளாதார சவால்களை நாம் இன்றும் எதிர்கொண்டு வருகிறோம் என்பதில் சந்தேகமில்லை.
தாராளமய பொருளாதார மிகப்பெரிய தொழில்சார் நிறுவனங்கள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளன. இதுபோன்ற தொழில் நிறுவனங்களுக்கு பொருளாதாரம் சார்ந்த கொள்கைகளை மத்திய அரசு வகுத்துக் கொடுக்கிறது. ஆனால், அந்த நிறுவனங்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்கின்றன.
குறிப்பாக, சட்டம்-ஒழுங்கை காப்பதில் தொடங்கி உட்கட்டமைப்பு வசதிகள் வரை அனைத்தையும் மாநில அரசுகளே உருவாக்கிக் கொடுக்கின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள், மத்திய அரசு அளிக்கும் அனுமதியைக் கொண்டு மாநிலங்களில் தொழில் தொடங்க முன்வருவதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தரமான சாலைகள், மின்சாரம், அந்த மாநிலத்திலுள்ள மக்களின் கல்வியறிவு, உட்கட்டமைப்பு போன்ற வசதிகளை மனதில் கொண்டே தொழில் தொடங்குகின்றன.
ஏழை மக்களுக்கு பயனளிக்கும் பல சிறப்பான திட்டங்களை தமிழக அரசே நேரடியாகச் செயல்படுத்தி வருகிறது. பல சிறப்பானத் திட்டங்களை திட்டங்களை அளிப்பதில் தமிழக முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. குறிப்பாக, சத்துணவுத் திட்டத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். மேலும், முதியோர் ஓய்வூதியம், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இலவச அரிசி போன்ற பல புதுமையான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தின் நிர்வாகத் தரத்தை உயர்த்தவும் சில சிக்கல்களைத் தீர்க்கவும் மத்திய அரசு மானியங்களை வழங்கிட வேண்டும். அதன்படி, தரம் உயர்த்தப்பட்ட 14 திட்டங்களுக்கும், 10 புதிய திட்டங்களுக்குமாக மொத்தம் 41 ஆயிரத்து 408 கோடி ரூபாய் நிதியை மானியமாக வழங்கிட வேண்டும். இதில் சில முக்கியத் திட்டங்களை கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
காவல் துறை நவீன வகை கருவிகளை வாங்கவும், ஏற்கெனவே உள்ள தொழில்நுட்பங்களை தரம் உயர்த்துவதும் அவசியமாகும். மேலும், காவலர்களின் வீடுகள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே இருப்பது முக்கியம். இதற்காக புதிய திட்டங்களைச் செயல்படுத்த 3,825 கோடி ரூபாய் மானியம் தேவை.
இந்தியாவிலேயே நகரமயமாக்கல் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஏராளமான மக்கள் நகரத்துக்கு இடம்பெயர்வதும், நகரங்களில் வீடுகளுக்கான விலை அதிகளவு இருப்பதும் குடிசைகள் அதிகரிப்புக்கு காரணமாகி விட்டன. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, தமிழகத்திலுள்ள 10 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக, 7,150 கோடி ரூபாய் மானியம் தேவைப்படுகிறது.
காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இப்போது சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கென தனியாக கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறை மூலம் தமிழகத்தில் 7,504 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த அளவுடன் சூரிய ஒளி மூலம் உற்பத்தியாகும் மின்சாரமும் சேர்க்கப்படும்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு மிகையாகும். ஆனால், இந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அதிக செலவாகிறது. இதற்காக, நிதிக் குழுவின் உதவியை நாடுகிறோம். இந்தத் திட்டத்துக்காக 2,250 கோடி ரூபாய் மானியமாக வழங்கிட வேண்டும்.
பல்வேறு நிதிக் குழுக்கள் மூலமாக தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் எங்களுக்கு அநீதியே இழைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதிக்குழு அதுபோன்று செய்யாமல் போதிய நிதியை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications