3வது அணி பற்றி இப்போது கூறுவதற்கு எதுவும் இல்லை: கொடநாட்டிலிருந்து திரும்பிய ஜெ. பேட்டி
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கொடநாடு சென்ற முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் சென்னை திரும்பினார். மத்தியில் யாருக்கு ஆதரவு என்பதை நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அறிவிப்பேன் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட அதிமுகவுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சூறாவளி பிரச்சாரம் செய்தார். இதையடுத்து தேர்தல் முடிந்த பிறகு கடந்த மாதம் 27ம் தேதி புறப்பட்டு நீலகிரி மாவட்டம் கொடநாட்டுக்கு சென்றார்.

கொடநாட்டில் ஓய்வு எடுத்த அவர் இன்று சென்னை திரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கொடநாட்டில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பிய ஜெயலலிதா பிற்பகல் 2.38 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு அவர் கார் மூலம் போயஸ் கார்டனுக்கு சென்றார்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாளை மறுநாள் அதிமுகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் எனது கருத்துகளை தெரிவிக்கிறேன். 3வது அணி பற்றி இப்போது கூறுவதற்கு எதுவும் இல்லை. அனைவரையும் போல் நானும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன் என்றார்












Click it and Unblock the Notifications