தொண்டர்களுக்கு சிரிப்பு முகம்... செயற்குழுவில் "சிங்க முகம்"... அதிரடி ஜெ.
சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கிய அதிமுக செயற்குழுவில் பேசிய ஜெயலலிதா நேற்று கட்சியில் துரோகம் செய்தவர்களை நோக்கி தனது பேச்சினால் சாட்டை சுழற்றியுள்ளார் ஜெயலலிதா. உள்ளாட்சி தேர்தலில், எப்படி செயல்பட வேண்டும் என, நான் வியூகம் அமைத்து தருகிறேன், அதன்படி செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று ஆலோசனையும் கூறியுள்ளார்.
தொண்டர்களின் வரவேற்பினால் நெகிழ்ந்து அவர்களுக்கு சிரிப்பு முகம் காட்டிய ஜெயலலிதா, செயற்குழு கூட்டத்தில் சிங்க முகம் காட்டியுள்ளார். இதனால் அதிமுக நிர்வாகிகள் பலருக்கு உதறலில் உள் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவிற்கு ராசியான நிறம் பச்சை என்றாலும், நேற்று சனிக்கிழமை என்பதால் நேற்று சனிபகவானுக்கு பிடித்த நீல நிற புடவை அணிந்து வந்திருந்தார் ஜெயலலிதா. மேடையில், முதல்வர் ஜெயலலிதாவுடன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அவைத் தலைவர் மதுசூதனன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு ஜெயலலிதா உடன் வந்த முதல்வரின் தோழி சசிகலா. முன் வரிசையில், விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தார்.
மணிகளுக்கு பாராட்டு
சட்டசபை தேர்தலில், சிறப்பாக பணியாற்றியதாக, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வீரமணி, செல்லுார் ராஜூ ஆகியோருக்கு, முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.
சாட்டை சுழற்றல்
அமைதியாக ஆரம்பித்த ஜெயலலிதா பின்னர் அதிரடியாக பேசினார், நான் யாருக்காக உழைக்கிறேன்; உங்களுக்காக உழைக்கிறேன். அதை புரிந்து கொள்ளவில்லை. நான் முதல்வர் பதவியை தேடி செல்லவில்லை; முதல்வர் பதவி என்னை தேடி வந்துள்ளது. எனக்கு பிறகு கட்சியை வழிநடத்த வேண்டாமா.
பணத்தை பதுக்கியவர்கள்
திமுகவை வளர விடக்கூடாது என, உழைக்கிறோம். சிலர் அக்கட்சியுடன் கைகோர்த்து, நம் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். அவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. பணத்தை பதுக்கியவர்கள் விவரமும் உள்ளது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உழைப்பவர்களுக்கு வாய்ப்பு
உள்ளாட்சி தேர்தலில், கடந்த முறை போல, அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். எனவே, பணம் வாங்காமல், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை வெற்றி பெற வைப்போம். அனைவரும் கட்சிக்காக உழையுங்கள். எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வியூகம் வகுப்போம்
உள்ளாட்சி தேர்தலில், எப்படி செயல்பட வேண்டும் என, நான் வியூகம் அமைத்து தருகிறேன், அதன்படி செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று ஆலோசனையும் கூறியுள்ளார்.