இந்தக் கூட்டணி (இந்தத் தேர்தலுக்கு) போதும்.. என்று தைரியமாக சொன்ன முதல் தலைவி.. ஜெ.தான்!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு எப்படிப் போட்டியிடுவது என்பதை விட யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பதில்தான் அத்தனைக் கட்சிகளும் அலை மோதி வருகின்றன. ஆனால் முதல் முறையாக, எங்களுக்கு இந்தக் கூட்டணியே போதும் என்று வெளிப்படையாக, பகிரங்கமாக அறிவித்துள்ள முதல் தலைவியாக முதல்வர் ஜெயலலிதா உயர்ந்துள்ளார்.
மறுபக்கம், திமுக, காங்கிரஸ், பாஜக என அத்தனைக் கட்சிகளுமே கூட்டணியை பலப்படுத்த தேமுதிகவை வலை வீசி பிடிக்க கடுமையாக போட்டி போட்டுக் கொண்டுள்ளது முற்றிலும் வித்தியாசமாக தெரிகிறது.
ஆனால் இருக்கிற கட்சிகளே போதும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் இதே ஜெயலலிததான் கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுக்காக தேவுடு காத்திருந்தார் என்பதும் இங்கு நினைவு கூறப்பட வேண்டிய ஒன்று.
லோக்சபா தேர்தலுக்கு முன்கூட்டியே ஆயத்தம்
லோக்சபா தேர்தலுக்காக பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு செயல்பட ஆரம்பித்து விட்டார் ஜெயலலிதா. கூட்டணியை சின்ன அளவில் வைத்துக் கொள்வதுதான் அவரது திட்டங்களில் முக்கியமானது.
இடதுசாரிகள் மட்டும் போதும்...
இடதுசாரிகளை மட்டும் கூட்டுக்கு வைத்துக் கொண்டு மற்றவர்களை கழற்றி விடுவதே அதிமுகவின் முக்கியத் திட்டமாகவும் இருந்தது.
ஏன் இடதுசாரிகள் மட்டும்
காரணம், தேசிய அளவில் நாளை பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடும்போது இடதுசாரிகளின் ஆதரவு தேவைப்படும் என்பதால்தான் அவர்களை மட்டும் கூட்டுக்கு வைத்துக் கொண்டு மற்றவர்களைக் கழற்றி விட ஜெயலலிதா முடிவு செய்ததாக கருதப்படுகிறது.
தேவை சிக்கனம்
எனவேதான் தற்போதைய அதிமுக கூட்டணி மிகச் சிறியதாக இருக்கிறது. சிக்கனமாக இருக்கிறது. சொல்லிக் கொள்ளும்படியான கட்சிகள் என்று பார்த்தால் இரண்டு இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே. மற்றவர்கள் அத்தனை பேரும் பெரும்பாலும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடப் போகிறார்கள் - சரத் குமார் கட்சி உள்பட.
தைரியமாக சொன்ன முதல் தலைவர்
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுமே தற்போது கூட்டணிக்கு அலைந்து கொண்டுள்ளன. திமுக முதல் பாஜக வரை அத்தனை பேரும் தேமுதிக பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி எந்த டென்ஷனும் இல்லாமல் கப்சிப்பென்று வேட்பாளர்களையே அறிவித்து விட்டார் ஜெயலலிதா.
ஆனால் போன தேர்தலில்
ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இதே ஜெயலலிதாதான், தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்கு இழுக்க கடுமையாக முயற்சித்தவர் என்பதும் மறக்க முடியாத ஒன்றுதான்.
எப்படியோ, ஆரம்பத்திலிருந்தே தேர்தல் களத்தில் முன்னால்தான் ஓடிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இறுதியாக வெல்லப் போவது அவரா அல்லது வலுவான கூட்டணிக்காக காத்திருக்கும் மற்றவர்களா என்பதை தேர்தல் முடிவின்போதுதான் அறிய முடியும்.