ஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா? ஸ்டாலினிற்கு முதல்வர் ஜெயலலிதா கேள்வி
சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலின், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் அவருடையது தானா என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறியுள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டசபையில் நடைபெற்றது. சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை ஸ்டாலின் திரித்து ஃபேஸ்புக் பக்கத்தில் கூறிவருகிறார்.உண்மையிலேயே அவரது கருத்துகள் தானா என்பதை, அவர் விளக்கிட வேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது ஸ்டாலின் அவரது ஃபேஸ்புக் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், திமுகவின் தலைமைக் கழகம் அதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்டாலின் இணைய தளத்தை பராமரிக்கின்ற சில தோழர்கள் வெளியிட்டுள்ளனர் என்றும், இந்த வாழ்த்துச் செய்தி ஸ்டாலினின் விருப்பப்படி ஆனதில்லை என்றும் தெரிவித்து ஒரு விளக்கத்தை அளித்தது. சட்டம் ஒழுங்கு பற்றி ஸ்டாலின் பேஸ்புக்கில் வெளி வந்த பதிவுகளும் மற்றவர்களுடைய கருத்துகள் தானோ என்னவோ? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா அதிமுக ஆட்சியில் காவல்துறைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.சட்டம் ஒழுங்கை சீராக பராமரிக்கப்பதில் நாட்டிலேயே முதல் மாநிலம் தமிழகம்தான் என அசோசெம் தாக்கல் செய்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திமுக உறுப்பினர் வேலு சுட்டிக்காட்டினார். ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் சிறந்த பரிந்துரைகளையே அந்த அரசு ஏற்கவில்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். காவல்நிலையத்திற்குள் அரசியல்வாதிகள் செல்வதை தவிர்க்கும் நெறிமுறைகள் வகுக்கப்படவேண்டும் என்று காவல் ஆணையம் செய்த பரிந்துரையை திமுக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்












Click it and Unblock the Notifications