ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பதட்டம்: கடைகள் அடைப்பு
திருச்சி: சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் நீதிமன்றம் அறிவித்தபிறகு அவரது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பதட்டம் நிலவுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்தது.
ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கல்வீச்சு, கடையடைப்பு செய்வதுமாக உள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பதட்டம் நிலவுகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள கடைகளை அடைக்குமாறு அதிமுகவினர் மிரட்டினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. திருச்சியில் அதிமுகவினர் பேருந்து மீது கல்வீசித் தாக்கியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் தாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.